Thursday, August 25, 2016

How Lanka

முதிரை மரக்குற்றிகளை கடத்தி வந்த ஒருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு பெருமளவு முதிரை மரக்குற்றிகளை கடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மரக்குற்றிகளையும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் வனவள பாதுகாப்பு பிரிவினர் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.

இன்று நண்பகல் ஒரு மணியளவில் A 9 பிரதான வீதியின் கொடிகாமம் பகுதியில் வைத்து குறித்த நபரை கைது செய்திருந்ததாக விஷேட அதிரடிப்படையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவில் இருந்து முதிரை மரங்களை கடத்தி வருவதாக தமக்கு இரகசிய தகவலொன்று கிடைத்திருந்ததாகவும், இதனையடுத்து விஷேட சோதனை நடவடிக்கைகளை வடபிராந்திய காட்டிலாகா அதிகாரிகளுடன் இணைந்து தேடுதலை மேற்கொண்டிருந்ததாகவும் கூறினார்.

இதன்போது கொடிகாமம் பகுதியில் வைத்து டிப்பர் வாகனமொன்றை சோதனையிட்ட போதே இந்த மரக் கடத்தலானது கண்டுபிடிக்கப்பட்டது.

டிப்பர் வாகனத்தில் முதிரை மரக்குற்றிகளை போட்டு அதன் மேல் கருங்கற்களை போட்டு மூடி கொண்டு வந்திருந்ததாகவும், டிப்பர் வாகனத்தை செலுத்தி வந்த சாரதியை தாம் கைது செய்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த மரங்களின் மொத்த பெறுமதி 5 இலட்சத்திற்கு மேலானதாகும் என அதிகாரி கூறினார்.

கைது செய்யப்பட்ட நபரையும் கடத்தி வரப்பட்ட மரக்குற்றிகளையும் டிப்பர் வாகனத்தையும் சாவக்கச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.