Wednesday, January 10, 2018

How Lanka

100 செயற்கைக் கோள்களை அனுப்பி சாதனை படைக்க உள்ள இஸ்ரோ

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிலையம், 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உட்பட 31 செயற்கைக்கோள்களை, PSLV-C40 எனும் ராக்கெட்டின் மூலம் நாளை மறுநாள் விண்ணில் செலுத்த உள்ளது.

இதன் மூலம் இந்தியாவின் 100 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய சாதனையை இஸ்ரோ படைக்கவுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி, IRNSS-1 எனும் செயற்கைக்கோளை, PSLV-C39 என்னும் ராக்கெட்டின் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. ஆனால், அந்த செயற்கைக்கோள் சுற்றுவட்டப்பாதையை சென்றடைந்தபின், ராக்கெட்டை விட்டு வெளியேறவில்லை.

பின்னர், வெப்ப பாதுகாப்பு தகடு பிரிவதில் கோளாறு ஏற்பட்டதால், இத்திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இது இஸ்ரோவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதால், அதன் பின்னர் PSLV ராக்கெட் எதுவும் விண்ணில் செலுத்தப்படவில்லை.

இந்நிலையில் இஸ்ரோ, 710 கிலோ எடையுள்ள இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக்கோளையும், ஒரு மைக்ரோ மற்றும் ஒரு நேனோ செயற்கைக்கோளையும் கொண்ட PSLV-C40 எனும் ராக்கெட்டை, நாளை மறுநாள் விண்ணில் செலுத்தவுள்ளது.

இது குறித்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்க்கைக்கோள் மையத்தில் நடந்த அஸ்ட்ரோசாட் கண்காட்சியில், அதன் இயக்குனர் அண்ணாதுரை பேட்டியளித்திருந்தார்.

அவர் கூறுகையில், ‘இந்த 3 செயற்கைக்கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டால், இந்தியாவின் 100 செயற்க்கைகோள்களை விண்ணில் செலுத்திய சாதனையை இந்தியா படைக்கும்.

இது இஸ்ரோவின் முதல் சதம் ஆகும். இதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 25 நேனோ செயற்கைக்கோள்களும், 3 மைக்ரோ செயற்கைக்கோள்களும், PSLV-C40 ராக்கெட்டின் மூலம் விண்ணில் அனுப்பப்பட உள்ளன.

இந்த 31 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 1,323 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது.