Saturday, February 10, 2018

How Lanka

மீண்டும் மஹிந்தவின் ஆட்சியை விரும்கின்றனரா தென்பகுதி மக்கள் - 42 வீத வாக்குகளுடன் முன்னிலையில் மஹிந்த கட்சி

சிறிலங்காவில் நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணி சுமார் 42 வீத வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறது.

இதன் மூலம் பொதுஜன முன்னணிக்கு 359 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாமிடத்தில் உள்ளது. 30 வீத வாக்குகளைப் பெற்றுள்ள ஐதேக இதுவரை 218 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை பெற்றிருக்கிறது.

மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 11 வீத வாக்குகளுடன் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் இந்தக் கட்சிக்கு 87 ஆசனங்களே கிடைத்துள்ளன.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இதுவரையில், 7.82 வீத வாக்குகளுடன், 107 ஆசனங்களைக் கைப்பற்றி நான்காவது இடத்தில் உள்ளது.

ஜேவிபி 6.23 வீத வாக்குகளுடன், 33 ஆசனங்களைக் கைப்பற்றி அடுத்த நிலையில் உள்ளது.

தென்பகுதியில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அலையே வீசுவதாக வெளியாகும் தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதனால் தென்னிலங்கை அரசியலில் சங்று கலக்கமான சூழல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை வௌியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி 27 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 9 தொகுதிகளிலும் , ஐக்கிய தேசிய கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரு தொகுதியில் வெற்றிப்பெற்றுள்ளது.

வௌியாகியுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண முன்னிலையில் உள்ளது.

இதுவரை, சுமார் 50க்கும் அதிகமான தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, உள்ளாட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் வெளியாவது தாமதித்துள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து வட்டாரங்களின் வாக்களிப்பு பெறுபேறுகளும்மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதும், அவற்றில் சில அஞ்சல் வாக்குகளின் பெறுபேறுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றன.

எனினும் சில உள்ளாட்சி சபைகளின் பெறுபேறுகளில் அஞ்சல் வாக்களிப்பின் பெறுபேறுகள் உள்ளடக்கப்படாதுள்ளன.

இந்தநிலையில் குறித்த பெறுபேறுகளை மீண்டும்மீண்டும் பரிசீலிக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் தொலைநகல் மற்றும் தொலைபேசிகள் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட தகவல்களை, தரவு கட்டமைப்புகள் உட்புகுத்தும் வரையில், ஊடகங்களுக்கு பெறுபேறுகளை வழங்க முடியாத நிலை நிலவுகிறது.

இதனால் பெறுபேறுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளிப்படுத்தப்படும் வரையில் பொறுமைக் காக்குமாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.