Friday, February 16, 2018

How Lanka

சுதந்திர கட்சியை யாருடன் இணைப்பது - மஹிந்தவுடனா அல்லது ரணிலுடனா குழப்பத்தில் மைத்திரி

உள்ளூராட்சி தேர்தலில் சுதத்திரகட்சி அடைந்த தோல்வியின் எதிரொலி ஸ்திரமற்ற நிலையில் கொழும்பு அரசியல் காணப்படுகின்றது.
இந்நிலையில்  சுதந்திர கட்சியை மஹிந்தவுடனா இணைப்பது அல்லது ரணிலுடனா  இணைப்பது எனும் குழப்பத்தில் மைத்திரி உள்ளதாக அறியப்படுகின்றது.

இந்த நிலையில் அதனை தணிப்பதற்கான முயற்சியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் மற்றும் இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் ஆகியோர் நேரடியாகவே களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு தமிழ்ப் பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நேற்று தனித் தனியாகச் சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கேஷாப், தற்போதைய அரசியல் நிலைமையை சீர்செய்ய கூட்டாட்சியின் இரண்டு தலைவர்களும் புரிந்துணர்வுடன் செயற்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மாலைதீவில் ஏற்பட்டுள்ள நிலைமைபோல் இலங்கையிலும் ஓர் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று காலை அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்திய இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தான இந்தியாவின் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரதமர் ரணில் எதிர்வரும் வாரம் இந்தியா செல்லவுள்ள நிலையில் அந்த விஜயம் குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பில் தற்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடி நிலைமை அரசியல் தீர்வு முயற்சிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடும் என இராஜதந்திர வட்டாரங்கள் கவலை கொண்டிருப்பதாக மூத்த இராஜந்திர அதிகாரியொருவர் தெரிவித்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.