Monday, March 26, 2018

How Lanka

இலங்கை ஜனாதிபதிகள் பயன்படுத்திய ஆடம்பர கார்கள் ஆழ்கடலில் இன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது

யுத்தம் நடைபெற்ற காலத்தில் இலங்கை ஜனாதிபதிகள் பயன்படுத்திய அதிக விலை மதிப்பான குண்டு துளைக்காத ஆடம்பர கார்கள், ஜீப்கள் உட்பட 8 வாகனங்கள், விடுதலைப் புலிகளின் வேலின் என்ற கப்பல் என்பன இன்று நீர்கொழும்புக்கு அருகில் மேற்கு திசையில் உள்ள ஆழ்கடலில் மூழ்கடித்து அழிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த தொடர்பாடல் கருவிகள் உட்பட பெறுமதியான உபகரணங்கள், உதிரிபாகங்கள் அகற்றப்பட்ட பின்னர் அவை கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக கடற்படையின் உயர் அதிகாரி கூறியுள்ளார்.


ஜனாதிபதிகள் ஜே.ஆர்.ஜெயவர்தன, ரணசிங்க பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் மாத்திரமல்லாது முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பயன்படுத்திய வாகனம் உட்பட 25 வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு கடலில் மூழ்டிக்கப்பட தயாராக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 8 மாத்திரமே தற்போது அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தினால், கடற்படையினரிடம் கையளிக்கப்பட்ட இந்த வாகனங்கள் கடற்படைக்கு சொந்தமான சரக்கு கப்பலில் ஏற்றப்பட்டு, ஆழ்கடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படும் எனவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்தால், அவற்றை பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கொள்வனவு செய்து, அதனை குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தலாம் என்பதால், அதனை தவிர்ப்பதற்காக வாகனங்களை இவ்வாறு ஆழ்கடலில் மூழ்கடித்து அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடலில் இன்று மூழ்கடிக்கப்பட்ட வேலின் என்ற கப்பல் விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆயுதங்களை ஏற்றி வர பயன்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி என்ற குமரன் பத்மநாதனுக்கு சொந்தமான இந்த கப்பலை கடற்படையினர் இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு எடுத்து வந்தனர்.

இந்த கப்பலை கடற்படையினர் சில வருடங்கள் பயன்படுத்தி விட்டு பின்னர், பயன்பாட்டில் இருந்து நீக்கியதாகவும கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

ரங்கலை கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்படடிருந்த இந்த கப்பல் வேறு ஒரு கப்பல் மூலம் இழுத்துச் செல்லப்பட்டு வாகனங்களுடன் ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.