Tuesday, March 13, 2018

How Lanka

வைபர் மீதான தடை நீக்கம்

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் முதலான சமூக ஊடகங்கள் பாவனை தடை தொடர்கின்ற நிலையில், இன்று நள்ளிரவு முதல் வைபர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஊடாக இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், வைபர் மீதான தடை நீக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் மீது தடை விதிக்கப்பட்டமையால், வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் தமது உறவினர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ள சிரமங்களை எதிர்நோக்கியமை தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளது.

அத்துடன், வர்த்தகர்களுக்கும், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் கடந்த தினங்களில் ஏற்பட்ட அசௌகரிய நிலை குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த விடயங்களைக் கருத்திற்கொண்டு ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக வைபர் சமூக வலைத்தளத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை இன்று நள்ளிரவு முதல் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.