Wednesday, April 25, 2018

How Lanka

இனியும் பொறுக்க இயலாது - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சுமந்திரனின் எச்சரிக்கை

அரசியல் தீர்வுக்கான முயற்சிகளில் அரசு தொடர்ந்தும் பாராமுகமாக இருக்குமாயின், வடக்குக் கிழக்கில் அரச நிர்வாகத்தை முடக்குவதற்கான போராட்டம் முன்னெடுக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளமை அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள்மீது சிறிதும் அக்கறையில்லை, அரசுடன் ஒட்டியிருந்து கொண்டு சுகபோகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கூறியவர்கள், சுமந்திரனின் அறிவிப்பையடுத்து வாயடைத்துப்போய் நிற்கின்றனர். கூட்டமைப்பின் தற்போதைய மனநிலையையே சுமந்திரன் எடுத்துக் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டினால் அதில் ஏராளமான அத்தியாயங்கள் அவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களையும், அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அநியாயங்களையும் எடுத்துக் கூறுவனவாகவே அமைந்துள்ளன.

நாடு சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து இன்று வரையில் பிரச்சினைகளுக்கு மத்தியில் தான் தமிழ் மக்களது வாழ்க்கை கழிந்து வருகின்றது.

தந்தை செல்வா போன்ற மிதவாதத் தலைவர்கள் இனியும் பொறுமை காக்க முடியாது என உணர்ந்து கொண்டதால் தான் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டங்களை அகிம்சை முறையில் ஆரம்பித்தனர். ஆனால் இனவாதிகள் இரும்புக் கரங்கொண்டு அவற்றை அடக்குவதிலேயே குறியாகச் செயற்பட்டனர்.

தமது முயற்சிகளுக்கு ஏற்பட்ட தோல்விகளால் ஏமாற்றமுற்று உளரீதியாகப் பாதிக்கப்பட்ட தந்தை செல்வா, அந்த ஏக்கம் கலையாத நிலையில் இவ்வுலகை விட்டு நீங்கிச் சென்றார்.

அவருக்குப் பின்வந்த தலைவர்களாலும் எதையுமே சாதிக்க முடியவில்லை.இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களைக் கைகளில் ஏந்தினர்.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஆயுதப் போராட்டம் இந்த நாட்டின் அடித்தளத்தையே ஆட்டிப் பார்த்து விட்டது. பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.

கணக்கிடமுடியாத அளவுக்கு பொருளாதார இழப்புக்கள் ஏற்பட்டன. மீள முடியாத கடன் சுமைக்குள் நாடு தள்ளப்பட்டமைக்கு இந்த நீண்ட போரே காரணமாகும்.

கடந்த 2009ஆம் ஆண்டு புலிகள் தோற்கடிக்கப்பட்டமை தமிழர்களின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக மாற்றி விட்டது. அது மட்டுமல்லாது, எதையும் கேட்டு வாங்கும் நிலைக்குள் அவர்களைத் தள்ளிவிட்டது.

தமிழ்த் தலைவர்கள் கேட்டுக் கொண்டதை நிறைவேற்றி வைக்கின்ற நிலையில் அரசு இல்லாததால், தமிழ் மக்கள் பொறுமையிழந்த நிலையில் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதைக் காண முடிகின்றது.

சுமந்திரனின் தற்போதைய அறிவிப்பு இனியும் பொறுமை காக்க முடியாது என்ற நிலையில் வௌிவந்த ஒன்று என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டின் இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் மற்றுமொரு போராட்டத்தைக் கையில் எடுப்பது என்பது சாதாரண விடயமல்ல. அதுவும் ஆரம்பப் புள்ளியிலிருந்து ஆரம்பிப்பது என்பது மிகவும் சிரமானதொரு காரியமாகும்.

கூட்டமைப்பின் தலைவர்கள் தீர ஆலோசித்ததன் பின்னரே இத்தகையதொரு முடிவை எடுத்திருப்பார்களென நம்பலாம்.தமிழர்கள் மிக அதிகளவில் வாழ்கின்ற தமிழ் நாட்டிலும் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

மத்தியில் ஆளுகின்ற பா.ஜ. க அரசுக்கு எதிரான போராட்டங்களாகவே இவற்றைப் பார்க்க முடிகின்றது. இந்த நிலையில் ஈழத் தமிழர்களும் போராட்டத்தில் மீண்டும் குறிப்பது குறித்துச் சிந்திப்பது இந்திய, இலங்கை அரசுகளுக்கு உவப்பானதாக இருக்கப் போவதில்லை.

தந்தை செல்வாவின் தலைமையிலும் அரச நிர்வாகத்தை முடக்கும் பொருட்டு மாவட்டச் செயலகங்களுக்கு முன்பாக மறியல் போராட்டங்கள் இடம்பெற்றன. அவற்றில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதையும் காணமுடிந்தது.

ஆனால் அப்போதைய அரசு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை. அந்த அகிம்சை வழிப் போராட்டங்களும் அடக்கி ஒடுக்கப்பட்டன.

போர் ஓய்ந்த பின்னரும் அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமை தவறானதொரு முடிவாகும்.

பேரினவாதத் தரப்பினர் தமிழர்களைக் கிள்ளுக்கீரையாக மதிக்கின்ற மனப்பான்மையையே இது எடுத்துக் காட்டுகின்றது.

இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை பன்னாட்டுச் சமூகம் ஏற்றுக்கொள்ளவே செய்யும்.

ஏற்கனவே இலங்கை மீது அதிருப்தியில் உள்ளதால், ஆயுதம் ஏந்தாத அகிம்சைப் போராட்டம் பன்னாட்டுத் தரப்புகளால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க சூழ்நிலை உருவாகவே செய்யும்.

தமிழ்த் தலைவர்கள் தரப்பினர் கட்சி பேதங்களை மறந்து கூட்டமைப்பின் தலைமையில் இடம்பெறுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் போராட்டத்துக்கு ஆதரவை வழங்க வேண்டும்.

தமிழர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்று திரளும்போது அதற்குத் தனியானதொரு மதிப்பு ஏற்பட்டு விடும்.

இதனால் எமது தமிழ்த் தலைமைகள் பதவிகளுக்காகச் சண்டையிடுவதை விடுத்து உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுத் தமிழர்களின் பலத்தை உலகறியச் செய்ய வேண்டும்.

இதேவேளை ஆளும் தரப்பினரும் இனவாதிகளும் இனியும் தமிழர்களைக் குறைவாக எடை போடுவார்களாயின் அதுவே அவர்களுக்கு வினையாக முடிந்து விடும்.

இந்த நாட்டின் அரசியல் தீர்வு நீண்ட காலமாகவே இழுபறியான நிலையில் காணப்படுகின்றது.இதன் காரணமாக பல அனர்த்தங்களையும் நாம் எதிர்

கொண்டு விட்டோம்.

தமிழர்கள் இதற்காக மீண்டும் போராடியே ஆக வேண்டும் என்றால் அதில் நியாயம் இருப்பதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.