Tuesday, May 1, 2018

How Lanka

கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களூடாக மக்கள் நலன்களை முன்னெடுத்து சாதித்துக் காட்டுங்கள் - டக்ளஸ்


எமக்குக் கிடைக்கபெற்ற வாய்ப்புக்களை பயன்படுத்தி கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலத்தில் சாதித்துக் காட்டிய மக்கள் நலன்சார்ந்த பணிகளை போன்று தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அயராது பாடுபடுங்கள் அதற்கான அனைத்து முயற்சிகளையும் பெற்றுத்தர நான் தயாராகவே இருக்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.



ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்டத்திற்கான வியஜம் ஒன்றை இன்றையதினம் மேற்கொண்டுள்ளார். இதன்போது கட்சியின்  குறித்த மாவட்ட நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் -

நாம் தூரநோக்குள்ள மக்கள் நலன் சார் திட்டங்களை முன்னிறுத்தியே எமது மக்கள் பணிகளை முன்னெடுத்து செயற்படுத்தி வருகின்றோம். எமக்கு கிடைக்கப்பெற்றிருந்த குறைந்தளவான அரசியல் பலத்தைக்கொண்டு தான் நாம் அந்தந்த அரசுகளுடன் மேற்கொண்ட இணக்க அரசியலினூடாக இப்பகுதியின் பல்வேறுபட்ட அபிவிருத்திகளை  செய்து காட்டியிருக்கின்றோம்

தற்போது அவ்வாறான அரசியல் பலம் எம்மிடம் குறைந்தளவாக இருந்தாலும் எமது அனுபவங்களையும் கடந்தகால வரலாற்று படிப்பினைகளையும் கொண்டு எம்மால் தொடர்ந்தும் இப்பகுதி மக்களின் நலன்சார் தேவைகளை முன்னெடுத்து செல்லமுடியும்.

எனவே எமக்குக் கிடைக்கபெற்ற வாய்ப்புக்களை பயன்படுத்தி இம் மாவட்டத்தில் மக்கள் நலன்சார்ந்த பணிகளை தெர்டர்ந்தும் முன்னெடுத்துச் சென்று இம்மாவட்ட மக்களது வாழ்வியல் மாற்றங்களுக்காக அயராது பாடுபடுவோம் என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.


குறித்த வியஜத்தின்போது  சமகால அரசியல் தொடர்பாகவும் கட்சி முன்னெடுத்துச் செல்லும் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் கட்சியின் மாவட்ட நிர்வாக உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.