Saturday, June 9, 2018

How Lanka

எல்லா வினையும் மகிந்தவால் வந்தது - விஜயதாஸ காட்டம்

இராணுவ தண்டிப்புக்கு கதவுகளை திறந்துவிட்ட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இன்று எம்மை குறை கூறுவது வேடிக்கையானது என்று உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாஸ ராஜபகஷ காட்டமாக தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு நிதியம் சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சபையில் தொடர்ந்தும் பேசிய அவர்,

இன்று இராணுவத்தை தண்டிக்கபோவதாக கூறும் நபர்கள் கடந்த காலத்தில் இராணுவத்தை தண்டிக்க கதவுகளை திறந்தனர் என்பதை மறந்துவிடக் கூடாது.

யுத்தம் முடிவுக்கு வந்து 48 மணித்தியாலம் கடக்க முன்னர் ஐக்கிய நாடுகள் செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி நிலைமைகளை கூறினீர்கள். அதன் பின்னரே நாட்டில் தருஸ்மான் குழு செயற்பட ஆரம்பித்தது.

அதன் பின்னரே இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. சர்வதேச விசாரணை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கையும் அதன் பின்னரே எழுந்தது.

இதற்கு முன்னர் இலங்கையில் சர்வதேச தலையீடுகள் ஏற்படும் நோக்கில் ரோம் உடன்படிக்கை செய்துகொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்ட போது அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க உடன்படிக்கையில் பாராதூரமான தன்மைகளை கவனத்தில் கொண்டு உடன்படிக்கையை கைச்சாதிடாது நிராகரித்தார்.

எனினும் அதன் பின்னர் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் தான் பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. அதன் பின்னரே சர்வதேச எம்மை நெருக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்தது.

எவ்வாறு இருப்பினும் எமது ஆட்சியில் எமது இராணுவத்தின் மீதான பொய்யான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் நிராகரித்து சர்வதேசம் எம்மை ஏற்றுகொள்ளும் நகர்வுகளை முன்னெடுத்துள்ளோம்.

இனியும் நாம் எமது இராணுவத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். அதில் எந்த சந்தேகமும் எழப்போவதில்லை. எனினும் முன்னைய ஆட்சியாளர்கள் எம்மை விமர்சிப்பது வேடிக்கையானதாக அமைந்துள்ளது.

எமது ஆட்சியில் ஒருபோதும் இராணுவ காட்டிக்கொடுப்பு இடம்பெற்றவில்லை. நான் நீதி அமைச்சராக இருந்த போது ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் ஜேர்மனிய இராஜதந்திரிகள், பிரதிநிதிகள் என்னை சந்தித்து கலப்பு நீதிமன்றம் அமைக்க கேட்டதுடன், இராணுவத்தை விசாரிக்கும் நீதிமன்ற பொறிமுறை ஒன்றினை எவ்வாறு உருவாக்கப்போகின்றீர்கள், எப்போது, எந்த அடிப்படையில் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன என்றும் கேள்விகளை கேட்டனர்.

எனினும் நாம் இராணுவத்தை ஒருபோதும் தண்டிக்கப் போவதில்லை. காட்டிக்கொடுக்க போவதில்லை. இராணுவத்தை கையாளும் விதத்தில் தெரேசா மே என்ன யுக்திகளை கையாண்டாரோ அதே கொள்கையை தான் நாமும் பின்பற்றப்போகின்றோம் என்பதை உறுதியாக தெரிவித்தேன் . யுத்த குற்றம் என்ற குற்றச்சாட்டை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

இன்று வடக்கில் இடம்பெறும் நல்ல நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். வடக்கில் அண்மையில் நான் விஜயம் மேற்கொண்டேன். அதன்போது இன்று முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை என்னால் அவதானிக்க முடிந்தது.

வடக்கு கிழக்கில் தொழில் வாய்ப்புக்களை நாம் அதிகரித்து வருகின்றோம். வடக்கு கிழக்கின் மக்களுக்கும் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றோம். அமைச்சுக்களில் நாம் வேலை வாய்ப்புக்களை வழங்கும் போது அவர்களின் நிலைமைகளையும் கருத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.