Tuesday, October 23, 2018

How Lanka

சீ.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து பயணிக்க பயணிக்கமாட்டேன் - எம்.கே.சிவாஜிலிங்கம்

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் முதலமைச்சருடன் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை என்று மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையின் இறுதி அமர்வு இன்று நடைபெற்றது. இதில், கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைப்பதற்கு நான் தயாராக இல்லை. அண்மையில் பருத்தித்துறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்கால அரசியலில் சிவாஜிலிங்கம் தன்னுடன் இணைந்து பயணிப்பார் என கூறியுள்ளார்.

இதே விடயத்தை நேரில் சந்திக்கும்போதும் கூட முதலமைச்சர் ஒருதடவை கூறினார். ஆனால் நான் அவருக்கு அப்போது கூறியதையே இப்போதும் கூறுகிறேன்.

தமிழ் மக்களுக்கு இப்போது தேவையானது அடுத்த முதலமைச்சரோ, மாகாணசபை உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்ல.

தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றே சமகால இன்றியமையாத தேவையாகும். அந்த தேவையை 2 அல்லது 3 வருடங்களுக்குள் பெற்றுக் கொடுக்காவிட்டால் இந்த இனம் இந்த நாட்டில் நிரந்தர அடிமைகளாக மாற்றப்படும்.

ஆகவே நிரந்தர தீர்வு ஒன்றினை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் இரட்டை குழல் துப்பாக்கி போல் இருக்கவேண்டும் என நான் முதலில் கூறியிருந்தேன்.

இப்போது கூறுகிறேன். தமிழ் மக்களுக்கு இரட்டை குழல் துப்பாக்கி போதுமானதல்ல. இதேவேளை, தமிழ் மக்களுக்கு இப்போது பல்குழல் பீரங்கி தேவையாக உள்ளது. அதற்காக நாங்கள் ஒற்றுமையை குலைக்காமல் ஒன்றாக இருக்கவேண்டும்.

ஆவே முதலமைச்சர் கூட்டமைப்பிலிருந்து விலகி தனியே பயணித்தால் முதலமைச்சருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை என்று மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.