Thursday, September 29, 2016

How Lanka

கருணாவிற்கு மரணதண்டனை வழங்குங்கள்

“எனது மனைவி, பிள்ளைகள், உறவினர்களைப் படுகொலைசெய்த கருணா அம்மானை உடன் கைது செய்யுங்கள். எமது குடும்பத்தை அழித்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கினாலே எனது ஆத்மா சாந்தியடையும்.”- இவ்வாறு ஏறாவூர் நகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நல்லிணக்க செயலணி அமர்வில் காமிது லெப்பை மீராசாகிப் (வயது – 78) என்ற வயோதிபர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

நான் ஏறாவூர் சதாம் ஹுஸைன் மாதிரிக் கிராமத்தைச் சேர்ந்தவன். எனக்கு தற்போது 78 வயது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் எனது வீட்டுக்கு ஆயுதங்களுடன் வந்த எல்.ரி.ரி.ஈயினர் மனைவி மற்றும் எனது 6 பெண் பிள்ளைகள் உள்ளிட்ட ஒன்பது பேரை வெட்டிக்கொலை செய்தனர். இதனால் நான் தனிமரமாக – மனநிலை பாதிக்கப்பட்டவனாக இருக்கிறேன்.

கொலையாளிகள் தற்போது எங்கிருக்கிறார்கள் என எனக்குத் தெரியாது. ஆனால், இந்தப் படுகொலைக்குப் பொறுப்பான கருணா அம்மான் உயிருடன் இருக்கிறார். அவரை உடன் கைது செய்து விசாரித்தால் உண்மைகள் வெளிவரும். எனது குடும்பத்தை அழித்தவர்களுக்கு மரணதண்டனை வழங்கினாலே எனது ஆத்மா சாந்தியடையும்.

எனது பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்டதனால் நான் இப்போது வயோதிப் பருவத்திலும் தொழில் செய்து வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றேன்.

எனக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் எந்தப் பகையும் இல்லை. நாம் தொடர்நதும் ஒற்றுமையாகவே வாழ விரும்புகின்றோம். சகோதர இன ஒற்றுமைக்காக முழுமையான பங்களிப்பை அரசு வழங்கவேண்டும்” – என்றார்.