Friday, September 29, 2017

How Lanka

பெண் தலைமைத்துவக் குடும்பங்களை இலக்கு வைக்கும் நுண் கடன் நிறுவனங்கள்


நுண் கடன் திட்டத்தினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பெரிதும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நுண் கடன் வழங்கும் நிறுவனங்கள் தற்போது அதிகளவில் வட மாகாணத்தினைத் தளமாகக்கொண்டு, பல நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு கடன் வழங்கி வருகின்றனர்.

இலங்கையில் வறுமை கூடிய மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இறுதிக்கட்ட யுத்தத்தில் அதிகளவு பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.

யுத்தத்தின் பின்னர் வட மாகாணத்தில் சுமார் 45 ஆயிரம் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவு மக்கள் விவசாயம், மீன் பிடி, கூலித்தொழில் மற்றும் சுயதொழில்கள் மூலமாக நாளாந்த வருமானத்தினை ஈட்டுகின்றனர்.

போதிய வருமானம் இன்மை மற்றும் குடும்பத்தலைவனை இழந்தமை போன்ற காரணங்களினால் இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய நுண் கடன்களை நாடிச்செல்கின்றனர்.

வங்கிகளில் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் கடினமாக இருப்பதனால், நுண் கடன்களை வழங்கும் நிறுவனங்கள் தமது இலக்கினை இலகுவதாக எட்டிவிடுகின்றன.

பிள்ளைகளின் கல்விச்செலவு மற்றும் நாளாந்த செலவீனங்களை வருமானத்தின் மூலம் ஈடு செய்ய முடியாமையால் மாற்று வழியின்றி நுண் கடன்களைப் பெறுகின்றனர்.

நாளாந்த, வாராந்த, மாதாந்த அடிப்படையில் திருப்பிச் செலுத்தும் வகையில் நுண் கடன்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

நுண் கடன் நிதி நிறுவனங்களின் வட்டி வீதமானது நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடுகின்றன.


12 வீதம் முதல் 25 வீதம் வரையான வட்டி வீதத்தில் நுண் கடன்கள் வழங்கப்படுகின்றன.

நுண் கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தத் தவறும் பட்சத்தில், பெண்கள் பாலியல் சுரண்டல்களுக்கு உள்ளாவதுடன் சிலர் தற்கொலை செய்யும் நிலைக்கு மனரீதியாக தள்ளப்படுகின்றனர்.