Wednesday, September 20, 2017

How Lanka

சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு

வவுனியா – பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதியில் இடம்பெற்ற பாரியளவிலான சட்டவிரோத மரக்கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினரின் கட்டளையை மீறி பயணித்த, சட்டவிரோதமாக மரம் ஏற்றிச்சென்ற வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

குஞ்சுக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக்குற்றிகளை ஏற்றிச்செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகர் நோக்கி பயணித்த வாகனத்தை மறித்து சோதனையிடுவதற்கு, விசேட அதிரடிப்படையினரும், வனப்பாதுகாப்பு அதிகாரிகளும் முயற்சித்துள்ளனர்.

மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற வாகனத்தை, விசேட அதிரடிப்படையினரும் வவுனியா வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினரும் பின் தொடர்ந்துள்ளனர்.

பேயாடி கூழாங்குளம் பகுதியிலுள்ள இராணுவ முகாமிற்கு அருகில், புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட நிலையில் வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

வாகனத்தின் சாரதியும் அதில் பயணித்தவர்களும் தப்பியோடிய நிலையில், வாகனமும் அதிலிருந்த பெறுமதியான மரக்குற்றிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, சுமார் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான 31 முதுரைக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் நீண்ட காலமாக இவ்வாறான பாரிய சட்டவிரோத மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் இந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட 15 மரக்கடத்தல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக வனவளத் திணைக்களம் குறிப்பிட்டது.