Thursday, January 4, 2018

How Lanka

வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த நாளை புதிய மேம்பாலத்தை திறக்கிறார் - மைத்திரி

இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம் எதிர்வரும் 08ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

ஸ்பெயின் நாட்டு நிறுவனமும் உள்நாட்டு நிறுவனமும் இணைந்து 2016 இல் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த மேம்பாலத்திற்கான மொத்த செலவு 4,700 மில்லியன் ரூபாய்களாகும்.

நான்கு வாகன ஓடுபாதைகளை கொண்டுள்ள இந்த மேம்பாலத்தின் நீளம் 534 மீற்றர்களாக காணப்படுவதுடன் 150 மீற்றர் நீளமுடைய பிரவேச மார்க்கத்தையும் கொண்டுள்ளது.

இதனுடன் இணைந்ததாக இதனைச் சூழவுள்ள பல வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் நாராஹேன்பிட்ட நோக்கிப் பயணிப்பதற்கான மாற்றுவழிப் பாதையும், புத்கமுவ நோக்கி பயணிப்பதற்கான மூன்று வாகன ஓடுபாதைகளைக் கொண்ட வீதியும் இதனூடாக அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

உயர் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொறியியல் நியமங்களுக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் இரும்பின்மீது கொங்றீட் பரவி இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது மேம்பாலமாகவும் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிக அலங்காரமான மேம்பாலமாகவும் வரலாற்றில் இடம்பெறுகின்றது.

நாளொன்றிக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிக எண்ணிக்கையான வாகனங்கள் பயணிக்கும் இராஜகிரிய சந்தி நாட்டில் அதிக வாகன நெருக்கடி காணப்படும் சந்தியாகவும் கருதப்படுகிறது.

இவ்வாறு அதிக வாகன நெருக்கடி காணப்படும் சந்தர்ப்பங்களில் அப்பாதையினூடாக பயணிக்கும் வாகனங்களின் வேகம் மணிக்கு இரண்டு கிலோமீற்றர்கள் அளவில் மிக குறைவாக காணப்படுவதுடன் இந்த மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் இராஜகிரிய பிரதேசத்தை சுற்றியுள்ள பாதைகளில் காணப்படும் அதிக வாகன நெருக்கடி இல்லாது போவதனூடாக வாகனங்களின் வேகம் தற்போதைய வேகத்தைப் போல் 8 மடங்காக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த பாலத்தின் நிர்மாணப்பணிகள் இவ்வருட இறுதியிலேயே நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பொதுமக்களின் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு அதன் நிர்மாணப்பணிகளை 11 மாதங்களுக்கு முன்னரே நிறைவு செய்ய ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்