Wednesday, February 7, 2018

How Lanka

தமிழீழ விடுதலைப் புலிகளின் உன்னத தியாகம் - பல்டியடிக்கும் சம்பந்தன்

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் தாயக பூமி. இந்த மண் எமக்கே உரித்தானது. இந்த மண்ணை ஆண்டவர்கள் நாம். மீண்டும் இந்த மண்ணை நாம் ஆளவேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய சம்பந்தன்,

எமது தாயக மண்ணை மீட்பதற்காக தமிழ் பிள்ளைகளான தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய உன்னத போராட்டத்தையும், அவர்களின் தியாகத்தையும் நாம் மறந்திடலாகாது.

"தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையில் 2002ஆம் ஆண்டு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற பேச்சின்போது எட்டப்பட்ட இணக்கப்பாடே எமது இலக்கு. அதை அடைவதை நோக்கியே நகர்கின்றோம். அதற்காகவே நாம் எத்தனங்களை மேற்கொள்கின்றோம்.

"ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியிலான வாழ்விடப்பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கொள்கையின் பிரகாரம் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல் என்பது ஒஸ்லோ இணக்கப்பாடு.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையில் இது எட்டப்பட்டிருந்தது.

எமது தேர்தல் அறிக்கையிலும் ஒஸ்லோ இணக்கப்பாட்டை நாம் வலியுறுத்தியுள்ளோம். இதுவே எமது இலக்கு. அதனை அடைவதற்கு நாம் எத்தனங்களை மேற்கொள்கின்றோம்.

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் சில முன்னேற்றம் இருக்கின்றது. சில விடயங்களில் இன்னமும் முன்னேற்றம் வேண்டும். சில விடயங்கள் சம்பந்தமாக பேச்சு நடத்தி முடிவெடுக்கப்படவேண்டும்.

வடக்கு - கிழக்கு இணைப்பைப் பற்றி இன்னமும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை. வடக்கு - கிழக்கு இணைப்புச் சம்பந்தமாக மூன்று விடயங்கள் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பேசப்படவேண்டும். பேசி முடிவுக்கு வரவேண்டும். அந்த முடிவு எமது மக்களுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் எந்தத் தீர்ப்பை வழங்கப்போகின்றார்கள் என்று தென்னிலங்கை ஆட்சியாளர்களும், சர்வதேச சமூகமும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

தமிழ் மக்கள் தங்களது கோரிக்கையை ஒருமித்து முன்வைத்தால், எங்களது கரங்கள் பலப்படுத்தப்படும்'' என்றார்.