Wednesday, February 7, 2018

How Lanka

பிரியங்க பெர்னான்டோவை பதவியில் இருந்து நீக்கிய அதிகாரிகளைக் கடுமையாக கண்டித்துள்ள மைத்திரிபால

பிரிட்டனில் உள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ நீக்கியதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளைக் கடுமையாக கண்டித்துள்ளதுடன், மீண்டும் அவரை பணியில் இணைத்துக் கொள்ளுமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதிலிருந்து இலங்கை ஜனாதிபதியின் தமிழர்களுக்கு எதிரான கோரமுகம் அம்பலமாகியுள்ளது என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதை அடுத்து, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பாதுகாப்பு ஆலோசகர் பணியில் இருந்து இடைநிறுத்துவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தது.

வெளிவிவகார அமைச்சின் இந்த உத்தரவை நேற்று ரத்துச் செய்த ஜனாதிபதிர் மைத்திரிபால சிறிசேன, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை மீண்டும் உடனடியாக பணியில் இணைந்து கொள்ளுமாறும் அறிவித்திருந்தார்.

வெளிவிவகார அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் அவர் எழுத்து மூலம் தனது உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரிகேடியர் பிரியங்க பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எரிச்சலடைந்தார் என்றும், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளை கண்டித்துள்ளார் என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பணி இடைநிறுத்தம் செய்வதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தம்முடன் கலந்தாலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.