Monday, February 26, 2018

How Lanka

இன்று இரவுக்குள் நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை வந்தடையும்

இன்று இரவுக்குள் நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை வந்தடையும். இறுதி மரியாதை மற்றும் இறுதி சடங்குகளுக்கு பின்னர் நாளை உடல் தகனம் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

நடிகை ஸ்ரீதேவி தன்னுடன் உணவருந்த வருவார் என்று அவரது கணவர் போனி கபூர் காத்திருந்த நிலையில் ஹோட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் அவர் பிரேதமாக கிடந்துள்ளார்.

துபாய் நகரில் நடிகை ஸ்ரீதேவி தங்கி இருந்த ஹோட்டல் அறையில் அவர் உயிருடன் இருந்த போது நடந்தது என்ன? என்பது குறித்து துபாயில் இருந்து வெளியாகும் ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டு வருகின்றன.

துபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஹோட்டலில் கடந்த 22-ம் தேதி போனி கபூர் உறவினர் மோஹித் மார்வா திருமணம் நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகள் குஷியுடன் கலந்து கொண்டார்.

அவரது மூத்த மகள் ஜான்வி கபூர், தனது முதல் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் துபாயில் நடந்த திருமணத்துக்கு செல்லவில்லை. இந்த திருமணம் முடிந்ததும், போனி கபூரும் இளைய மகள் குஷியும் இந்தியா திரும்பினர்.

ஆனால், தனது சகோதரி ஸ்ரீலதாவுடன் துபாயில் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்த ஸ்ரீதேவி, ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா ஹோட்டலில் இருந்து எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலுக்கு வந்து அறை எடுத்து தங்கி இருந்தார்.

மும்பை திரும்பிய போனி கபூர் கடந்த வெள்ளிக்கிழமை பிரபல தொழிலதிபரும், ஊடகம் மற்றும் சினிமாத்துறை பிரமுகருமான மன்மோகன் ஷெட்டி என்பரின் பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர், கடந்த சனிக்கிழமை ஸ்ரீதேவிக்கு தெரிவிக்காமல் போனி கபூர் மீண்டும் துபாய் புறப்பட்டார். விமான நிலையத்தில் இருந்து அன்று மாலை 5.30 மணியளவில் ஸ்ரீதேவி தங்கி இருந்த ஹோட்டலின் அறைக்கு சென்றார்.

அப்போது, தூங்கி கொண்டிருந்த ஸ்ரீதேவியின் முன் திடீரென்று தோன்றி, அவரை எழுப்பி, இன்ப அதிர்ச்சி அளித்ததாக கூறப்படுகிறது. இருவரும் சுமார் 15 நிமிடங்கள் பேசி கொண்டிருந்தனர்.

பின்னர் அன்றிரவு விருந்துக்கு தயாராகும்படி ஸ்ரீதேவியை அழைத்துள்ளார். குளித்து விட்டு வருவதாக பாத்ரூமிற்கு சென்ற ஸ்ரீதேவி வெகு நேரமாகியும் திரும்பவில்லை.

பாத்ரூம் கதவை போனி கபூர் சிலமுறை தட்டியும் ஸ்ரீதேவி திறக்காததால், கதவை உடைத்து போனி கபூர் உள்ளே சென்ற போது, அங்கு ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் பேச்சு மூச்சின்றி, அசைவற்று கிடந்துள்ளார்.

இதையடுத்து, தனது நண்பர் ஒருவரை அந்த அறைக்கு போனி கபூர் வரவழைத்தார். இதுதொடர்பாக டாக்டர்கள் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீதேவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து துபாய் நேரப்படி இரவு 11.30 மணிக்கு ஸ்ரீதேவி உயிரிழந்து விட்டதாக போனி கபூர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த தகவல் செய்தியாக வெளியாவதற்கு முன்னதாக, ஸ்ரீதேவியின் மரணம் குறித்த அறிவிப்பை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

ஹோட்டலில் உள்ள பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக துபாயிலுள்ள சில ஊடகங்கள் மூலம் ஒரு தகவல் பரவியது.

குறைந்த இரத்த அழுத்தத்தால் ஸ்ரீதேவி மயங்கி விழுந்தார். இதையடுத்துதான் அவரது உயிர் பிரிந்திருக்கலாம் என அந்த தகவலில் கூறப்பட்டது.

உயிர் பிரிந்த நிலையில்தான் ஸ்ரீதேவியின் உடல் துபாயில் உள்ள ரஷித் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு அங்கிருந்து உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பொதுவாக துபாயில் மரணமடைந்த ஒருவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அது குறித்த அறிக்கை கிடைத்தபிறகே உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைப்பார்கள்.

அந்த வகையில் நேற்று சரியான நேரத்திற்கு ஸ்ரீதேவி தொடர்பான தடய அறிவியல் ஆவணங்கள் கிடைக்காததால் அவரது உடலை அவர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அவரது உடல் துபாய் போலீஸ் தலைமையகத்தில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணியளவில் ஸ்ரீதேவி உடலின் தடய அறிவியல் ஆவணங்கள் அவரது உறவினர்கள் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, இன்னும் சற்று நேரத்தில் போலீசார் ஸ்ரீதேவியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீதேவியின் உடல் பதப்படுத்துவதற்காக முஹைஸ்னா பகுதிக்கு கொண்டு செல்லப்படும். இதற்கு சுமார் 90 நிமிடங்கள் தேவைப்படும் என தெரிகிறது.

ஸ்ரீதேவியின் உடலை மும்பைக்கு கொண்டுவர இந்திய தொழிலதிபர் அனில் அம்பானி ஏற்பாடு செய்திருந்த தனி ஜெட் விமானம், துபாயில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அநேகமாக, இன்று இரவுக்குள் ஸ்ரீதேவியின் உடல் மும்பை வந்தடையும்.

இறுதி மரியாதை மற்றும் இறுதி சடங்குகளுக்கு பின்னர் நாளை உடல் தகனம் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், வெளிநாடு சென்று ஒருவர் இறந்து விட்டால் அவர் உயிருடன் இல்லை என்பதை பதிவு செய்யும் வகையிலான சட்ட நடவடிக்கைக்காக பாஸ்போர்ட் ரத்து செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் துபாயில் ஸ்ரீதேவி மரணமடைந்ததால் அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு அதன்பிறகு அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பும் முயற்சியில் துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம் ஈடுபட்டு வருகிறது.