Thursday, April 12, 2018

How Lanka

இராணுவ முகாம்களின் தலைமைத்துவப் பயிற்சி - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இராணுவ முகாம்களின் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படவுள்ளமையை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 21 நாட்கள் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் தலைமைத்துவ பயிற்சிக்காக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் விஷ்வமடு முகாமிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நடத்தப்படும் பண்ணைகள் மற்றும் முன்பள்ளிகளில் பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பகுதி பகுதியாக அழைக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

அத்துடன், இந்தப் பயிற்சிக்காக அனைவரும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சீருடை அணிந்து செல்ல வேண்டும் எனவும் அதற்காக சீருடையும் வழங்கப்பட்டுள்ளதாகவும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதாக இருந்தால் அதனை கல்வித் திணைக்களமே மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திடம் வினவிய போது, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒருபோதும் இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதில்லையென சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் வடக்கு, கிழக்கு கட்டளைத் தளபதி லெப்டினன்ட் கேர்ணல் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

வட மாகாணத்தைச் சேர்ந்த 3500 பேர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு கட்டம் கட்டமாக பயிற்சி வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் இணைந்துகொள்ளும் அனைவருக்கும் ஆரம்ப பயிற்சி கட்டாயம் என லெப்டினன்ட் கேர்ணல் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிவில் சட்டங்கள், மனித உரிமை விவகாரங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான ஆரம்ப கட்ட பயிற்சியே வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏற்கனவே 12 பயிற்சி முகாம்களை நிறைவு செய்துள்ளதாகவும் 13 ஆவது பயிற்சி முகாமே இடம்பெறுவதாகவும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் வடக்கு, கிழக்கு கட்டளைத் தளபதி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அதிபர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியின் போது ஹம்பாந்தோட்டை சூச்சி தேசிய பாடசாலை அதிபர் கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி உயிரிழந்தார்.

அதன் பின்னர் இவ்வாறான தலைமைத்துவப் பயிற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.