Tuesday, May 29, 2018

How Lanka

இராணுவப் படையினரின் செல்லிடப்பேசி மற்றும் இணைய தகவல் திரட்டப்படுகின்றது

இராணுவத்தில் கடமையாற்றி வரும் அனைத்து அதிகாரிகள் மற்றும் படைச் சிப்பாய்களின் செல்லிடப்பேசி மற்றும் இணைய கணக்கு விபரங்கள் கோரப்பட்டுள்ளன.

இராணுவத்தில் கடமையாற்றி வரும் சுமார் இரண்டு லட்சம் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் விபரங்களை வழங்குமாறு இராணுவத் தலைமையகம் கோரியுள்ளது.

செல்லலிடப்பேசி இலக்கங்கள், முகநூல் கணக்கு, வாட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக ஊடக வலையமைப்பு கணக்கு விபரங்களை உடனடியாக வழங்குமாறு இராணுவத் தலைமையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைத்து இராணுவ படை வீரர்களும் தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட செல்லிடப்பேசி இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்களை அவர்கள் தலைமையகத்திற்கு அறிவிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இராணுவத்திற்கு அறிவிக்காமல் வேறும் செல்லிடப்பேசி இலக்கங்களை பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த உத்தரவினை இராணுவத் தலைமையகம் நாட்டின் அனைத்து இராணுவப் படைப் பிரிவுகளுக்கும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இராணுவத் தலைமையகம் இவ்வாறான ஓர் உத்தரவினை பிறப்பித்துள்ளது என்பதனை இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தபத்து கொழும்பு ஊடகமொன்றுக்கு உறுதி செய்துள்ளார்.

இராணுவப் படையினருக்கு இடையில் உள்ளக ரீதியான தொடர்பாடல்களை கிரமப்படுத்தும் நோக்கில் இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளதாக பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.