Tuesday, May 29, 2018

How Lanka

முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் நிதியுதவி

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் தனது மாநகரசபை உறுப்பினர் பதவிக்கான மாதாந்தக் கொடுப்பனவை மிக வறிய நிலையில் வாழ்ந்துவரும் முன்னாள் புலிகள் அமைப்பை சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு வழங்கிவைத்துள்ளார்.

யுத்தம் முடிவுற்ற பின்னரான காலப்பகுதியில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு மக்களுடன் இணைக்கப்பட்டுள்ள புலிகள் அமைப்பை சேர்ந்த பலர் தமது வாழ்க்கையை கொண்டு நடத்தமுடியாத வறுமை நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் யாழ் மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களும் தத்தமது பங்களிப்பை ஓரளவேனும் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் யாழ் மாநகர சபையின் முதல் அமர்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மற்றுமொரு மாநகரசபை உறுப்பினர் றீகன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் தொழில்வாய்ப்புக்கு தொழில் உபகரணங்கள் இன்றி தமது குடும்பத்தை கொண்டு செல்லமுடியாத நிலையில் வாழ்ந்துவந்த செபஷ்தியாம்பிள்ளை ச் என்ற புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு தனது இம்மாதக் கொடுப்பனவை றெமீடியஸ் வழங்கிவைத்துள்ளார்.

இது தொடர்பில் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் கூறுகையில் -

போராளிகளின்  தியாகங்களை எடுத்துரைத்து தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொண்ட இதர தரப்பு தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அப் போராளிகளின் தற்போதைய வாழ்வியல் நிலைமை தொடர்பில் எதுவிதமான நடவடிக்கைகளையும் பெற்றுக்கொடுக்காத நிலையில் அந்த முன்னாள் போராளிகள் பலர் இன்று கையேந்து நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களது வாழ்வியல் நிலைமைகளை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக உள்ளது.

இந்நிலையில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது எண்ணக்கருவான மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்றதன் அடிப்படையில் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு உறுப்பினர்களுக்கு எனது மாதாந்தக் கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும் வழங்கவுள்ளேன் என அவர் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.