Thursday, May 3, 2018

How Lanka

திருகோணமலையில் கைக்குண்டை வெட்டியும் தெய்வாதீனமாக உயிர் பிழைத்த இளைஞர்

திருகோணமலையில் கைக்குண்டு ஒன்றை மண்வெட்டியால் வெட்டி தெய்வாதீனமாக, இளைஞர் ஒருவர் உயிர் பிழைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

திருகோணமலை ஐந்தாம் கட்டை பொது மயானத்தில் அண்மையில் எஸ்.எப்.ஜீ 87 கைக்குண்ட ஒன்றே மண்ணில் புதையுண்டிருந்த நிலையில், மண்வெட்டியால் வெட்டப்பட்டுள்ளது.

வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்த இளைஞர் ஒருவரின் பூதவுடலை நல்லடக்கம் செய்வதற்காக குழியொன்றை வெட்டிக் கொண்டிருந்த சில இளைஞர்களில், ஒருவர் மண்வெட்டியினால் மண்ணை வெட்டிய போது இந்த குண்டு வெட்டுபட்டுள்ளது.

மண்வெட்டியினால் வெட்டுண்ட போது கைக்குண்டின் டெட்டனேட்டர் உடைந்து போன போதிலும் தெய்வாதீனமாக குண்டு வெடிக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றிற்கு அறிவித்து நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய குண்டு செயலிழக்கச் செய்யப்படும் எனவும் தற்பொழுது குண்டு விசேட அதிரடிப்படையினரின் பொறுப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அண்மைய நாட்களில் திருகோணமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் மீட்கப்பட்ட இரண்டாவது கைக்குண்டு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.