Friday, July 21, 2017

How Lanka

முதல் டெஸ்ட் 26ம் திகதி காலியில்

மூவகைப் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோத இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேற்று முன்தினம் இங்கு வந்துள்ளது. இதில் 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி/டுவெண்டி போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ள இந்திய அணி தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ம் திகதி புதன்கிழமை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்திலிருக்கும் இந்திய அணி கடந்த காலங்களில் தொடர்ந்து தன் சொந்த மண்ணில் பலம் வாய்ந்த அணிகளான தென்னாபிரிக்க, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து, மற்றும் பங்களாதேஷ், அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சகலதுறைகளிலும் சிறப்பாகச் செயற்பட்டு இலகுவாக வெற்றி பெற்றது. இத் தொடர் வெற்றிகளுக்கு தலைவர் கோஹ்லி உட்பட இந்திய அணியின் அனைத்துத் துடுப்பாட்ட வீரர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்து வந்துள்ளனர்.

அவ்வணியின் அனுபவீரர்கள் மட்டுமல்ல அண்மைக்காலமாக அறிமுகமான இளம் வீரர்கள் கூட சதம், இரட்டைச் சதம், முற்சதம் என்று தங்களது பொறுப்பை உணர்ந்து செயற்படடு வருகின்றனர். இந்திய அணி கடந்த காலங்களில் தாம் விளையாடிய அநேகமான டெஸ்ட் போட்டிகளிலும் முதல் இன்னிங்சில் ஓரிரு துடுப்பாட்ட வீரர்கள் சதம் அல்லது இரட்டை சதங்கள் குவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் அவ் அணி முதல் இன்னிங்சில் இலகுவாக 500, 600 ஓட்டங்களைக் கடந்து பெற்றுள்ளமை அவ்வணயின் தொடர் வெற்றிகளுக்கு உந்துதலாக அமைந்துள்ளது. மேலும் பின்வரிசையில் வரும் சுழற்பந்து விச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோரும் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்து வருகின்றனர். கடைசியாக இந்திய அணி தன் சொந்த ம்ண்ணில் அவுஸ்திரேலியாவுடன் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் மோதியது. அத் தொடரில் கான்பூரில் நடந்த முதல் போட்டியில் அவ்வணி தோல்வியுற்றது.

இத்தோல்வி இந்திய அணி தொடர்ச்சியாக 17 டெஸ்ட் வெற்றிகளின் பின் அடைந்த முதல் தோல்வியாகும். கடந்த மூன்று வருடங்களாக அவ்வணி எந்தவித டெஸ்ட் தொடர்களிலும் தோல்வியுறாத சாதனையையும் கொண்டுள்ளது. விராட் கோஹ்லியின் தலைமையிலான இந்திய அணி துடுப்பாட்டத்திலும், பந்து வீச்சிலும் சம பலத்துடன் விளங்குகின்றது. எனவே இலங்கை பந்து வீச்சாளர்கள் இத்தொடரில் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுப்பது திண்ணம்.

சுழற் பந்துகளுக்கு சாதகமான இலங்கை ஆடுகளங்களில் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் சாதிக்க அதிக வாய்ப்புள்ளது. இலங்கை அணியின் முன்னாள் சுழந்பந்து வீச்சாளர் முரளிதரனும் இவர்களின் பந்து வீச்சுக்கு இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்கள் கடும் சவாலை எதிர்கொள்வார்கள் என எதிர்வு கூறியுளளார்.

அண்மைய தோல்விகளால் துண்டு போயிருக்கும் இலங்கை அணிக்கும் புதுத் தலைவர் சந்திமாலுக்கும் இத் தொடர் மிகவும் கடிமான தொடராக அமையப் போகின்றது. துடுப்பாட்டத்திலும், களத்தடுப்பிலும் கடந்த வாரம் முடிவுற்ற சிம்பாப்வேயுடனான ஒரே டெஸ்டிலும் அவர்கள் பெரிதாக சாதிக்கவில்லை. அவ்வணியுடன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட்டில் தட்டுத்தடுமாறியே வெற்றி பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அப்போட்டயில் இலங்கை அணி வீரர் ஒருவர் கூட சமதடிக்கவில்லை. வழமைபோல் பந்து வீச்சில் ரங்கன ஹேரத்தைத் தவிர வேறு எவரும் பிரகாசித்திருக்கவில்லை.

சிம்பாப்வேயுடனான தொடரிலும் இலங்கையணி வெற்றிபெற அவரே காரணமாயிருந்தார். இப்போதைய நிலையில் இந்திய அணியுடனான போட்டியிலும் பெரும்பாலும் 40 வயதான ரங்கன ஹேரத்தை நம்பியே இலங்கை அணி களமிறங்கும்.

இலங்கை இந்திய அணிகள் கடைசியாக 2015ம் ஆண்டு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரொன்றில் மோதியது. இத் தொடரில் இந்திய அணி சுமார் 20 வருடங்களின் பின் இலங்கை மண்ணில் தொடரைக் கைப்பற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சுமார் 35 வருடகால இந்திய- இலங்கை டெஸ்ட் வரலாற்றில் இரு அணிகளுக்குமிடையில் 15 தொடர்களில் மொத்தம் 38 போட்டிகள் நடைபெறுள்ளது. இதில் 16 போட்டிகளில் இந்திய அணியும், 7 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றிபெற்றுள்ளன. இதில் இந்திய அணி 9 தொடர்களிலும் இலங்கை அணி 3 தொடர்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 3 தொடர்கள் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றுள்ளன.

இரு நாடுகளுக்குமிடையில் 1982ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற முதல் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. அதன் பின் 1985ம் ஆண்டு இலங்கை மண்ணில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதன்முதலாக மோதியது. 85-.09-.06ம் திகதி சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 149 ஓட்டங்களால் வெற்றி பெற்று டெஸ்ட் வரலாற்றில் முதல் டெஸ்.ட் வெற்றியைப் பெற்றது. 1-0 என்ற கணக்கில் இத் தொடரையும் கைப்பற்றிய இலங்கை அணி டெஸ்ட் வரலாற்றில் முதலாவது டெஸ்ட் தொடர்வெற்றியையும் இந்திய அணிக்கு எதிராகவே பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான மோசமான தொடர் தோல்வியாக 1993--94ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகளிலும் இன்னிங்ஸினால் தோல்வியுற்ற இலங்கை அணி தொடரை 3-0 என்ற ரீதியில் இழந்ததே மோசமான தோல்வியாகப் பதிவாகியுள்ளது.

ஒரு அணி பெற்ற கூடிய ஓட்டமாக இலங்கை அணி 1997ம் அண்டு ஆர். பிரேமதாச மைதானத்தில் உலகசாதனை ஓட்டங்களாகப் பெற்ற 952 ஓட்டங்களும், இந்தியா அணி 2009ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற போட்டியொன்றில் பெற்ற 726 ஓட்டங்களுமே பதிவாகியுள்ளது. குறைந்த ஓட்டங்களாக இலங்கை 1991ஆம் ஆண்டு சண்டிகாரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பெற்ற 82 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததும் இந்திய அணி 2008ம் ஆண்டு கொழும்பு எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 2வது இன்னிங்ஸில் 138 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததுமே பதிவாகியுள்ளது.