Sunday, November 5, 2017

How Lanka

தொடரும் பெற்றோல் நெருக்கடி - எரிபொருள் ஏற்றிய கப்பலொன்று வரவுள்ளது


நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

நாளாந்த கேள்வியை பூர்த்தி செய்வதற்கு தேவையான பெற்றோல் கையிருப்பிலுள்ளதாக, பெற்றோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.

எவ்வாறியினும், பெற்றோலிய தொழிற்சங்கங்கள் மாறுபட்ட கருத்துக்களை வௌியிட்டுள்ளன.

கடந்த மூன்றாம் திகதி பிற்பகலிலிருந்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு போதுமானளவு பெற்றோல் விநியோகிக்கப்படாததால் இந்த நிலை ஏற்பட்டது.

எவ்வாறாயினும், சில பகுதிகளில் வழமைப் போன்று எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதையும் இன்று அவதானிக்க முடிந்தது.

ஐ.ஓ.சி நிறுவனத்தினால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட எரிபொருள் கப்பல் தாமதமடைந்தமையால் இந்த நிலை ஏற்பட்டதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு நேற்று அறிக்கையொன்றினூடகத் தெரிவித்தது.

எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெற்றிக்தொன் பெற்றோலைக் கொண்டுவரும் கப்பல், சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனமான மெரிடைம் சேர்விஸ் நிறுவனம் குறிப்பிடும் வகையில், இன்று மாலை அரபிக்கடலை கடந்துள்ளது.

அத்துடன், ஐ.ஓ.சி நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட எரிபொருள் கப்பல் செய்மதி தரவுக்கமைய, கடந்த மாதம் 29ஆம் திகதி தங்காலை கடற்பரப்பை வந்தடைந்துள்ளது.

தற்போது அந்தக் கப்பல் திருகோணலை துறைமுகத்தை அண்மித்து நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் ஏற்றிய கப்பலொன்று நாளை மறுதினம் நாட்டிற்கு வரவுள்ளது 

நாளாந்த தேவைகளுக்காக மாத்திரம் பெற்றோல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் கப்பலொன்று நாளை மறுதினம் (07) நாட்டை வந்தடையும் என அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து குறித்த கப்பல் நாட்டிற்கு வருகை தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது சுமார் 9,000 மெற்றிக்தொன் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பிலுள்ளதாகவும் பெற்றோலிய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாளாந்தம் சுமார் 1800 மெற்றிக்தொன் முதல் 2000 மெற்றிக்தொன் எரிபொருள் தேவைப்படுகின்றது.

எனினும் சிலர், பெற்றோலை களஞ்சியப்படுத்துவதற்கு முற்படுவதால், நாளாந்தம் தேவைப்படும் 2000 மெற்றிக்தொன் எரிபொருளை மாத்திரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் மக்கள் வழமை போன்று எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் கொழும்பின் பல பகுதிகளில் இன்றும் பெற்றோலை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.