Monday, December 25, 2017

How Lanka

முதலமைச்சரின் உத்தரவை உதாசீனம் செய்த பொலிஸார்


வட மாகாண முதலமைச்சரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவு உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் பேருந்துகள் சேவையில் ஈடுபட வசதியாக பழைய பேருந்து நிலையத்தினை மூடிவிடுமாறு வட மாகாண முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்றிலிருந்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபட வேண்டும் என வட மாகாண முதலமைச்சரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.


அத்துடன், இது வரைகாலமும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வந்த நகரசபைக்கு சொந்தமான பகுதியை தனியார் வாகனங்கள் சென்று வருவதற்கு மாத்திரம் அனுமதி வழங்கும் வகையிலும், பேருந்துகள் உட்செல்லாத வகையிலும் 24ஆம் திகதி நள்ளிரவு முதல் மூடுமாறு வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு முதலமைச்சர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.


எனினும், பழைய பேருந்து நிலையம் நேற்று நள்ளிரவு முதல் மூடப்படாமல் காணப்பட்டதுடன் பொலிஸார் மற்றும் வவுனியா நகரசபை செயலாளர் உட்பட்ட உத்தியோகத்தர்கள் அவ்விடத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர்.

மேலும், தமக்கு பேருந்து நிலையத்தினை மூடுமாறு உத்தரவு வரவில்லை எனவும், அவ்வாறு மூடும் பட்சத்தில் தாம் பாதுகாப்பு தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சூழலில் பழைய பேருந்து நிலைய பகுதிக்கு வருகை தந்த வவுனியா தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி வவுனியா நகரசபை செயலாளரிடம் நகரசபையினால் பேருந்து நிலையத்தினை மூடுங்கள் என தெரிவித்த போதிலும் அவ்வாறான உத்தரவு தமக்கு கிடைக்கவில்லை எனவும், முதலமைச்சர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கே உத்தரவு இட்டுள்ளதாகவும் நகரசபை செயலாளர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் உத்தரவை பொலிஸார் கடைப்பிடிக்காமையினால் வழமைபோன்றே இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுத்திருந்தது.