Wednesday, December 13, 2017

How Lanka

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே - முக்கிய அறிவிப்பு


பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பது யாவரும் அறிந்த விடயமே.

அந்த வகையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து பிரித்தானிய அரசாங்கமும், ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவும் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்த பின்னணியில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பிரித்தானியவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய மக்களுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் பிரித்தானிய மக்களுக்கும் பல விடயங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில், Jay Visva Solicitorsக்கு மின் அஞ்சல் ஊடாக அனுப்பப்பட்ட அறிக்கையில் பின்வரும் முக்கிய விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

“நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியில் வரும்போது, உங்களுடைய அனைத்து உரிமைகளும் பிரித்தானிய சட்டங்களாக எழுதப்பட்டிருக்கும். உங்களுடைய உரிமைகள் பிரித்தானிய நீதிமன்றங்களால் அமுல்படுத்தப்படும்.

பொருத்தமான இடங்களில், எங்களுடைய நீதிமன்றங்கள் சம்பந்தப்பட்ட European Court of Justice (ECJ) வழக்குச் சட்டங்களை (Case Law) கருத்திற்கொள்ளும்.

தற்போதுள்ள வழக்குச் சட்டங்கள் தெளிவில்லாத சந்தர்ப்பங்களில், எங்களுடைய நீதிமன்றங்கள் தங்களுடைய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர், ECJஐ இந்த சட்டங்கள் தொடர்பான பொருள்விளக்கம் கோரி தொடர்பு கொள்வதற்கு 8 ஆண்டுகள் வரைக்கும் உடன்பட்டுள்ளோம்.

நாங்கள் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டுவெளியில் வரும்போது, தொடர்ச்சியாக 5 வருடங்கள் பிரித்தானியாவில் வசித்திருந்தால், நீங்கள் Settled Status பெறுவதற்கு தகுதியானவர்களாக இருப்பீர்கள்.

அத்துடன், ஐந்து வருடங்களுக்கு குறைவாக இருந்திருந்தால், நீங்கள் ஐந்து வருடங்களை பூர்த்திசெய்யும் வரைக்கும் இங்கு தங்கக் கூடியதாக இருக்கும்.

நாங்கள் பேச்சுவார்த்தையில் உடன்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், Settled Status உடன் உங்களுடைய நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்ற பின்னரும் உங்களுடன் பிரித்தானியாவில் இணையலாம்.

உங்களுடைய மருத்துவ, சுகாதார உரிமைகள், ஓய்வூதிய உரிமைகள், மற்றும் ஏனைய சலுகைகள் சம்பந்தமான ஏற்பாடுகள் தற்போது உள்ளது போன்றே இருக்கும்.

அடுத்த வருட நடுப்பகுதிக்கு அப்பாலிருந்து தெளிவான, இலகுவாக நெறிப்படுத்தப்பட்ட செயல்முறை, நீங்கள் Settled Statusக்கு விண்ணப்பிக்க கூடிய வகையில் நடைமுறையிலிருக்கும்.

நீங்கள் ஏற்கனவே தகுதியான நிரந்தர வதிவுரிமை ஆவணத்தைப் பெற்றிருந்தால், நீங்கள் இலவசமாகவே உங்களுடைய நிரந்தர வதிவுரிமையை Settled Statusஆக மாற்றிக்கொள்ளலாம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.