Saturday, February 3, 2018

How Lanka

பூநகரியில் நீர் பற்றாக்குறை

கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்தில் மக்களுக்கான குடிநீரை வழங்குவதற்கு போதிய வளங்கள் இல்லாதிருப்பதுடன், குடிநீரைப் பெறுகின்ற இடங்களில் நீர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் பூநகரி பிரதேசசபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பூநகரி பிரதேசத்தில் பல்வேறு இடங்களிலும் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய குடிநீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் ஓரு பிரதேசமாகக் காணப்படும் பூநகரி பிரதேசம் சுமார் 11 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு வருடம் முழுதும் குடிநீர் விநியோகம் மேறகொள்ளும் தேவை ஏற்படுகின்றது.

தற்போது பூநகரியின் பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு காணப்படுகின்றது. இவ்வாறு குடிநீர்த்தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பூநகரி பிரதேசசபையிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

பிரதேச சபையினால் ஏற்கனவே குடிநீர் விநியோகிக்கின்ற பகுதிகளுக்கு தொடர்ச்சியாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. மக்கள் கோரிக்கை விடுகின்ற பகுதிகளுக்கு மேலதிக சேவைகளை வழங்குவதற்கு பிரதேசசபையிடம் போதிய வளங்கள் இன்றி காணப்படுகின்றது.

இதனைவிட தண்ணீரை பெற்றுக் கொள்கின்ற தெளிகரை போன்ற இடங்களில் போதியளவு தண்ணீரைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

இவ்வாறு வளங்கள் இன்மை மற்றும் நீர்பெறும் இடங்களில் போதிய நீரைப்பெற்று கொள்ள முடியாமை என்பவற்றால் குடிநீர் விநியோகம் மேற்கொள்வதில் சிரமங்கள் காணப்படுகிறன.

இதேவேளை பாடசலைகளுக்கு பிரதேசசபையூடாக குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை. அவ்வாறு பாசாலைகளில் விசேட தேவைகளுக்கு தண்ணீர் கோரும் பட்சத்தில் தண்ணீர் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக தமக்கான குடிநீர் பெற்றுக்கொள்வதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.