Tuesday, March 6, 2018

How Lanka

கண்டியில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்

கண்டி மாவட்டத்தில் குறிப்பிட்ட பிரிவுகளில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

உடன் அமுலாகும் வகையில் தெல்தெனிய மற்றும் பல்லேகல பொலிஸ் பிரிவுகளில் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊரடங்கு சட்டமானது மறு அறிவித்தல் வரும் வரையில் அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 22ஆம் திகதி தெல்தெனிய பிரதேசத்தில் பாரவூர்தியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை, முச்சக்கரவண்டியில் வந்த சிலர் வழிமறித்து தாக்கினர்.

அதன்போது, தாக்குதலுக்கு உள்ளானவர் பலியானார். தாக்குதல் சம்பவத்தில் பலியானவரின் ஆதரவாளர்கள், தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீ மூட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை தொடர்ந்துள்ளது. இதில் மற்றுமொரு வர்த்தக நிறுவனத்திற்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 24 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை விடுவிக்கக்கோரி மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்ன தேரர் தலைமையில் தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் நிலைமை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் மக்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உடன் அமுலாகும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டி - திகன பகுதியில் 27 வர்தக நிலையங்கள் மீது தாக்குதல்

கண்டி - திகன பகுதியில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலையின் போது 27 முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றின் மீதும், வீடுகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

நேற்றைய தினம் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை காரணமாக திகன பிரதேசம் எங்கும் போர்க்களம் போல காட்சியளித்துள்ளது.

வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டதாலும், முஸ்லிம்களின் வீடுகள், வியாபார நிலையங்கள் எரிக்கப்பட்டதாலும், அந்த பகுதி முழுவதும் கருமையான புகை மூட்டமாக இருந்தமையை காணமுடிந்தது.

கடந்த மாதம் 22ஆம் திகதி தெல்தெனிய பிரதேசத்தில் பாரவூர்தியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை, முச்சக்கரவண்டியில் வந்த சிலர் வழிமறித்து தாக்கினர்.

இதன் போது தாக்குதலுக்கு இலக்கானவர் உயிரிழந்தார். அவரது இறுதி கிரியைகள் நேற்று இடம்பெற்ற நிலையில், கண்டி மாவட்டத்தின் திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் அசாதாரண நிலை ஏற்பட்டிருந்தது.

இதனால், கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்ததுடன், இன்றைய தினம் கண்டிமாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.