Wednesday, April 4, 2018

How Lanka

நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி - பல்டி அடிக்கும் மஹிந்த

தன்னை பொறுத்தமட்டில் பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வெற்றியே கிடைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கும் போது அதில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்களே கையெழுத்திட்டிருந்தனர். எனினும், பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக 76 பேர் வாக்களித்திருந்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்திருந்தால் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் முடிவு மாறியிருக்கும்.

எவ்வாறாயினும், தன்னை பொறுத்தமட்டில் பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வெற்றியே கிடைத்துள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீது நாடாளுமன்றில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 76 பேரும், எதிராக 122 பேரும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.