Friday, May 25, 2018

How Lanka

மக்களின் காணிகளை விடுவிக்க படையினர் பணம் கேட்கிறார்கள் - அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்

மக்கள் தங்களின் காணிகளை தாருங்கள் என கேட்கிறார்கள் . ஆனால் மக்களின் காணிகளை விடுவிக்க படையினர் பணம் கேட்கிறார்கள்என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த இக்கட்டான நிலையில் பணத்தை கொடுத்து மக்களுடைய காணிகளை பெற்று மக்களிடம் கொடுக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுடைய காணிகளை விடுவிப்பதற்கான பெருமளவு பணத்தை மீள்குடியேற்ற அமைச்சு படையினருக்கு கொடுப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

இந்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் சுவாமிநாதன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“இராணுவத்திடமிருந்து காணிகளை பெற்று மக்களிடம் அதனை வழங்குவதற்காக மீள்குடியற்ற அமைச்சு பெருமளவு நிதியை இராணுவத்திற்கு வழங்குவதாக முதலமைச்சர் கூறிய கருத்து உண்மையான கருத்து.

அதில் எந்தவொரு பிழையும் இல்லை. மக்களுடைய நிலத்தில் பாரிய கட்டடங்கள் மற்றும் தளபாடங்களை வைத்திருப்பதாகவும், அவற்றை வேறு இடங்களுக்கு நகர்த்துவதற்கு தமக்கு பெருமளவு நிதி தேவை. அவ்வளவு நிதி தங்களிடம் இல்லை என இராணுவம் கூறுகிறது.

ஆகவே அந்த நிதியை கொடுத்து மக்களுடைய காணிகளை மக்களிடம் மீள பெற்றுக் கொடுக்கிறோம். பணம் தரமாட்டோம் என கூறினால் இராணுவம் காணியை தர முடியாது என்கிறது.

மறுபக்கம் காணிகளை தாருங்கள் என மக்கள் கேட்கிறார்கள். ஆகவே மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு இராணுவத்திற்கு பணத்தை கொடுத்து மக்களுடைய காணிகளை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கிறோம்” என்றார்.