Friday, July 21, 2017

How Lanka

இனநாயக அரசு - சிறிலங்கா - பிரித்தானிய நாடாளுமன்றில் நிறுவிய நூல்

தன்னை சனநாயக அரசாகக் காண்பிக்கும் சிறிலங்கா, சாராம்சத்தில் முழு அளவிலான பௌத்த சிங்கள இனநாயக அரசு என்பதை நிறுவும் நூல் வெளியீட்டு நிகழ்வு பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்றுள்ளது.

கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா எழுதிய Government and Politics in Sri Lanka: Biopolitics and Security (இலங்கையில் அரசாட்சியும், அரசியலும்: உயிரரசியலும், பாதுகாப்பும்) என்ற அரசறிவியல் நூலிற்கான அறிமுக நிகழ்வு நேற்று 19.07.2017 புதன்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றில் நடைபெற்றது.

இதன்பொழுது உரையாற்றிய நூலாசிரியர், சிறிலங்கா ஒரு இனநாயக அரசு என்பதற்கான மிகச்சிறந்த ஆதாரமாக அதன் பெயர் திகழ்வதாகக் குறிப்பிட்டார்:

‘சிலோன் (Ceylon) என்று ஐரோப்பியர்களால் அழைக்கப்பட்ட இத்தீவு, பண்டைக் காலத்தில் தமிழர்களால் ஈழம் என்றும், இடைக்காலத்தில் இலங்கை என்றும் அழைக்கப்பட்டது.

ஆனால் லங்கா என்பது சிங்களவர்களால் மட்டும் பண்டைக் காலத்திலும், இடைக்காலத்திலும் இத்தீவை அழைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பெயராகும்.

இச் சிங்களப் பெயருக்கு முன்பாகப் புனிதமானது என்று தமிழில் பொருள்படும் ‘சிறி’ என்ற வடமொழிச் சொல்லை இணைத்ததன் மூலம் இத்தீவை சிங்களவர்களின் புனித பூமியாக அதன் பௌத்த சிங்கள ஆட்சியாளர்கள் வரையறுத்துள்ளனர்.

இது சிங்கள பௌத்த தேசியவாதத்தின் சித்தாந்த நூலாக விளங்கும் மகாவம்சத்தில் இருந்து தோற்றம் பெற்ற கருத்தியலாகும். இத்தீவு பௌத்த மதம் தழைத்தோங்குவதற்காகப் புத்தபிரானால் சிங்களவர்களிடம் கையளிக்கப்பட்டதாக மகாவம்சம் கூறுகின்றது.

எனவே இத்தீவிற்கு சிறிலங்கா என்று 1972ம் ஆண்டு பெயர் சூட்டியதன் மூலம் இதனை சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமான தீவாக அதன் ஆட்சியாளர்கள் வரையறுத்திருக்கின்றார்கள்.’

பிரித்தானிய நாடாளுமன்றின் செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறும் மண்டபத்தில் மாலை 6:00 மணிக்கு ஆரம்பமாகிய நூல் வெளியீட்டு நிகழ்வில் தலைமை உரையினை தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் தலைவர் சென் கந்தையா அவர்கள் நிகழ்த்தினார்.

முதன்மை உரைகளைப் பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியின் நிழல் நிதித்துறை அமைச்சர் ஜோன் மக்டொனல் (John McDonnell), லிபரல் டெமொகிரட் (Liberal Democrat) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்களின் கூட்டணி அரசாங்கத்தில் வணிகத்துறை அமைச்சராகப் பதவி வகித்த சேர் எட் டேவி (Sir Ed Davey), தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வெஸ் ஸ்றீற்றிங் (Wes Streeting), சிபோன் மக்டொனா (Siobhain McDonagh), ஸ்ற்ரிபன் ரிம்ஸ் (Stephen Timms), ஈராக்கின் குர்து மாநில அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான அரசியல் விவகாரப் பணிப்பாளர் கெசாரோ அஜ்காயி (Khasro Ajgayi) ஆகியோர் ஆற்றினர்.

நூல் அறிமுக உரையினை நூலின் ஆசிரியரான அரசறிவியலாளர் கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா ஆற்றினார்.

கருத்துரைகளை, பர்மிய மனித உரிமைச் செயற்பாட்டாளரும், LSE பல்கலைக்கழகத்தின் முன்னாள் அரசறிவியல் ஆராய்ச்சியாளருமான கலாநிதி மயூங்க் சார்னி (Myung Zarni), ஈழத்தமிழ் அரசியல் செயற்பாட்டாளரும், சிற்றி பல்கலைக் கழகத்தின் (City University) அரசறிவியல் பீட விரிவுரையாளருமான கலாநிதி மதுரிகா இராசரத்தினம் ஆகியோர் ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து SOAS University of London பல்கலைக்கழக இணை விரிவுரையாளரும், கலாநிதி பட்ட வேட்பாளருமான செல்வி வினோ கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையில் பார்வையாளர்கள் பங்கேற்ற கேள்வி-பதில் நேர நிகழ்வு நடைபெற்றது.