Friday, September 1, 2017

How Lanka

2019 உலகக்கிண்ண கிரிக்கெட் - தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது இலங்கை

2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான நான்காவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்தமையே இதற்கான காரணம் ஆகும்.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் முதல் விக்கெட் 06 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. என்றாலும், இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மா ஜோடி 219 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சவாலான நிலைக்கு உயர்த்தியது.

அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோஹ்லி, சர்வதேச ஒருநாள் அரங்கில் தன்னுடைய 29 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
விராட் கோஹ்லி 131 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், லசித் மலிங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். விராட் கோஹ்லியின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் ஒருநாள் அரங்கில் 300 விக்கெட்டுக்களை வீழ்த்திய 13 ஆவது வீரராக லசித் மலிங்க வரலாற்றில் இணைந்தார். ரோகித் சர்மா ஒருநாள் அரங்கில் தன்னுடைய 13 ஆவது சதத்தை எட்டினார்.
மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடிய முன்னாள் அணித்தலைவர் மஹேந்திரசிங் தோனி மற்றும் மனிஷ் பாண்டி ஜோடி 101 ஓட்டங்களை அதிரடியாகப் பகிர்ந்தது.

மனிஷ் பாண்டி அரைச்சதம் கடக்க மஹேந்திரசிங் தோனி 49 ஓட்டங்களைப் பெற்றார். இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 375 ஓட்டங்களைப் பெற்றது. இது இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் வைத்து பிறிதொரு அணி பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.
376 எனும் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் முதல் மூன்று விக்கெட்டுக்களும் 37 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.
நிரோஷன் திக்வெல்ல 14 ஓட்டங்களுடனும் தில்ஷான் முனவீர 11 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

தொடர்ந்து வந்த குசல் மென்டிஸ் ஓர் ஓட்டத்துடன் வெளியேறினார்.
இலங்கை அணி மேலதிகமாக 31 ஓட்டங்களைப் பெற்ற போது நான்காவது விக்கெட்டை இழந்தது. லஹிரு திரிமன்னே 18 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஜந்தாவது விக்கெட்டுக்காக இணைந்த அஞ்சலோ மத்யூஸ் மற்றும் மலிந்த சிறிவர்தன ஜோடி 73 ஓட்டங்களைப் பகிர்ந்து சற்று நம்பிக்கையளித்தது. அஞ்சலோ மத்யூஸ் 70 கடந்தார். ஏனைய வீரர்களும் பிரகாசிக்கத் தவற, இலங்கை அணி 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.