Friday, September 1, 2017

How Lanka

மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் அனித்தா சாதனை

வடக்கின் நட்சத்திரமான அனித்தா ஜெகதீஸ்வரன் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் புதிய இலங்கை சாதனையைப் படைத்துள்ளார்.
பியகமை மஹிந்த ராஜபக்ஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் 95 ஆவது தேசிய சம்பியன்ஷிப் விளையாட்டு விழாவில் அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளுக்கான சம்மட்டி எறிதல் , மகளிருக்கான நீளம் பாய்தல் , மகளிருக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் , மகளிருக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நேற்று (31) நடைபெற்றன.
ஆடவருக்கான சம்மட்டி எறிதலில் இலங்கை கடற்படையின் கே.பி.யூ.ஜி. ஜயவர்தன முதலிடத்தைப் பெற்றார்.

போட்டியில் அவர் 50.77 மீற்றர் தூரத்திற்கு ஆற்றலை வெளிப்படுத்தினார்.
மகளிருக்கான 10,000 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை கடற்படையின் எஸ். ஏ. லமாஹேவாத் முதலிடத்தை தன்வசப்படுத்தினார்.
அதற்காக அவர் 36 நிமிடங்கள் 256 செகன்ட்களை எடுத்துக்கொண்டார்.
இதேவேளை, அனைவரது எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் நடைபெற்ற மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் வடக்கின் நட்சத்திரமான அனித்தா ஜெகதீஸ்வரன் புதிய இலங்கை சாதனையை நிலைநாட்டினார்.
போட்டியில் அவர் 3.47 மீற்றர் தூரத்திற்குத் தாவினார்.