வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் பிராந்தியங்களாக சட்டப்படி ஏற்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவ்வாறின்றி பெரும்பான்மை மொழி, கலை, கலாசாரத்திற்குள் தமிழர்களை அமிழ்ந்துவிட வைப்பது இனப் படுகொலைக்கு சமமானதென குறப்பிட்டுள்ளார்.
யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேசிய நல்லிணக்கம் மீதான வடக்கு கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகளும் விதந்துரைகளும் குறித்த பிரகடன வெளியீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த உரையிலேயே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த உரையை முதலமைச்சர் சார்பில் மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வாசித்தார்.
அத்தோடு, அரசமைப்பு ரீதியான திருத்தங்கள், காணாமல் போனோர் விவகாரம், சமூகச் சீரழிவை கட்டுப்படுத்த துரித வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் உள்ளிட்ட 16 விடயங்களையும் முதலமைச்சர் தமது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.