Saturday, July 22, 2017

How Lanka

இளஞ்செழியனைக் குறிவைத்து நல்லூரில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் எதிரொலி


 யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினை அடுத்து யாழ்.மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதிரடிப் படையினரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிபதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

நல்லூர் பகுதியில் நீதிபதி இளஞ்செழியனின் வாகனம் சென்று கொண்டிருந்த போது அவருக்குப் பாதுகாப்பு வழங்கிக் கொண்டு இரண்டு சார்ஜன்கள் சென்று கொண்டிருந்தனர்.

அவ்வேளையில் நல்லூர் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதனையடுத்து அந்த நெரிசலை கட்டுப்படுத்த சார்ஜன் சென்றுள்ளார். அந்த இடத்தில் சாதாரணமாக நின்று கொண்டிருந்த ஒரு நபர், சார்ஜனின் இடுப்பிலிருந்த கைத் துப்பாக்கியினை உருவி எடுத்துள்ளார்.


இதனை அவதானித்துக் கொண்டிருந்த நீதிபதி இளஞ்செழியன் உடனடியாக சத்தம் போட்டுள்ளார். அதற்குள் சந்தேக நபர் சார்ஜன் மீது தாக்குதல் மேற்கொண்டதில் சார்ஜனின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

அதற்குள் நீதிபதி வாகனத்தைவிட்டு இறங்கிய வேளை அந்த சந்தேக நபர் நீதிபதியை இலக்கு வைக்க முற்பட்டுள்ளார், அந்த நேரத்தில் சாதுர்யமாக செயற்பட்ட பாதுகாவலர்கள் மீது மர்ம நபர் தாக்குதலை மேற்கொண்டிருக்கிறார்.

இதன்போது மற்றுமொரு பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபர் லிங்கம் கூல்பார் பக்கமாக ஓடிச்சென்று அங்கிருந்த வாகனம் ஒன்றினைப் பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்கள் குறித்து கருத்து வெளியிடும் சமூக ஆர்வலர்கள், நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது, மிகச் சாதாரணமானது அல்ல.

மிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் சாதாரண நபரினால் ஒரு கைத்துப்பாக்கியினை சடுதியாக எடுத்து, லோட் செய்து இயக்க முடியாது.

துப்பாக்கிகளை இயக்கிப் பழகிய, துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதில் அதிக பரீட்சயம் கொண்ட நபரினால் தான் இதனை இலகுவாக செய்திருக்க முடியும். எனவே இதன் பின்னணியில் மிகப் பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அவர்கள்.

குறிப்பா, புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தப்பிச் செல்வதற்கு, உதவி வழங்கியமை தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் போதைப்பொருள் பாவனை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நீதிபதி இளஞ்செழியன் தீவிர நடவடிக்கை எடுத்த வருகின்றார்.

இந்நிலையில் தான் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே இந்த தாக்குதலுக்கும், மேற்சொல்லப்பட்டவற்றிற்கும் தொடர்பு இருப்பதாகவே இதற்கு கண்டனம் வெளியிடும் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
யாழ். மேல் நீதீமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை இடைமறித்து மோட்டார்ச் சைக்கிளொன்றில் வந்த இருவரால் இன்று சனிக்கிழமை(23) மாலை நல்லூர் பின் வீதியில் நடாத்தப்பட்டது.

இச்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து நல்லூர், கந்தர்மடம், திருநெல்வேலி, கொக்குவில், யாழ். நகர் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.





பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரின் வீதி ரோந்துப் பணிகளும், கண்காணிப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை, இளஞ்செழியனைக் குறிவைத்துத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து இன்று இரவு நல்லூர் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் சடுதியாகக் குறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.