Sunday, October 15, 2017

How Lanka

நீர்த்தேக்கத்தை அண்டிய தாழ் நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

நாட்டின் சில பகுதிகளில் பெய்து வருகின்ற கடும் மழை காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

நிலவும் அதிக மழையுடனான வானிலையால் நீர்த்தேக்கங்களை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.



மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது இதனால் அதன் வான்கதவொன்றும் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் நீர்த்தேக்கத்தை அண்டிய தாழ் நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் சில இடங்களில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொரிங்டன் தோட்ட பகுதியில் ஆற்று நீர் உட்புகுந்தமையால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் மரக்கறி செய்கைகள் அழிவடைந்துள்ளன.

டயகம போடைஸ் பிரதேசத்தினூடாக ஹட்டன் செல்லும் பிரதான வீதியில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளன.

இந்த வீதியில் வாகனங்களை செலுத்தும்போது அவதானமாக செயற்படுமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுள்ளனர்.

இதேவேளை மஸ்கெலியா சாமிமலை பெயார் லோன் தோட்டம் மயில்வத்தை பிரிவில் ஏற்பட்ட மினி சூறாவளியினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதனால் பிரதேசத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

கடும் மழை மற்றும் பனிமூட்டம் நிலவும் காரணமாக கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் மல்லியப்பூ சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்தனர் .

வேன் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழந்து விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மண்சரிவு அபாயம் காரணமாக ஹட்டன் சமனலகம பகுதியில வசிக்கும் 12 குடும்பங்களுக்கு அப்பகுதியிலிருந்து வௌியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த மக்கள் தொடர்ந்தும் அப்பகுதியிலேயே வசிப்பதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை ஹற்றன் குடாகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

நேற்று பெய்த மழை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கோகாலை மாவட்டத்தில் இறப்பர் செய்கையில் ஈடுபடும் தொழிலாளர்களும் மழை காரணமாக தமது வாழ்வாதாரத்தில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதனால் தமக்கான பண்டிகைக் கொடுப்பனவுகளை இழக்க நேரிட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட யட்டியாந்தோட்டை – தெரணியகல களனி தோட்டத்திற்கு செல்லும் பாதையில் பருஸ்ஸல்ல மொட்ட பாலம் அமைந்துள்ள இடத்தில் களனி கங்கை பெருக்கெடுத்ததால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங் கொடுக்க நேரிட்டுள்ளது.

களுத்துறையின் புலத்சிங்கள – மொல்காவ பிரதான வீதியின் எடம்பகஸ் ஹந்திய மற்றும் தம்பல பிரதேசத்தில் குகுளே கங்கை பெருக்கெடுத்துள்ளது.

குடா கங்கை பெருக்கெடுத்ததால் புலத்சிங்கல – வறக்காகொட பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளது.

களுகங்கை பெருக்கெடுத்ததால் சில தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவெளை கிங் கங்கையின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதடன் விமல சுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.