Thursday, November 9, 2017

How Lanka

புத்தளம் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு - வைத்திய அதிகாரி நகுலராஜா

புத்தளம் மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக புத்தளம் மாவட்ட வைத்திய அதிகாரி நகுலராஜா தெரிவித்தார்.

இந்த மாதத்தில் மாத்திரம் 4 நோயாளர்கள் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஒரு நாளைக்கு 60 தொடக்கம் 70 நோயாளர்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவதாக புத்தளம் மாவட்ட வைத்திய அதிகாரி நகுலராஜா தெரிவித்தார்.

அத்துடன் புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையே டெங்கு காய்ச்சல் துரிதமாக பரவுவதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 942 பேர் பாதிக்கப்பட்டதுடன் அதில் 395 பேர் உயிரிழந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் மாத்திரம் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக 1100 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேல் மற்றும் வட மேல் மாகாணங்களிலேயே டெங்கு நோய்த் தாக்கத்தினால் அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

நாளை மற்றும் நாளை மறுதினங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.