Saturday, December 23, 2017

How Lanka

யாழ் போதனா வைத்தியசாலையில் சகல வசதிகளையும் மேம்படுத்த மத்திய சுகாதார அமைச்சு நடவடிக்கை

சகல வசதி வாய்ப்புக்களையும் மேம்படுத்தி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்து வடக்கு மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த மத்திய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இளையோர் இருவருக்கு இருதய சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட இருதய சத்திர சிகிச்சை மருத்துவ வல்லுநர் சிதம்பரநாதன் முகுந்தன் தலைமையிலான மருத்துவக் குழுவினரை பாராட்டும் நோக்கில் சுகாதார பணிப்பாளர் நாயகம் தலைமையிலான சுகாதார அமைச்சின் உயர்மட்டக் குழுவினர் இன்றையதினம் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தனர்.

சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க, பிரதி சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர் சிறிதரன், மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினரே யாழ் போதனா வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் தாதியர்களைச் சந்தித்தனர்.

அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தனர். அத்துடன் அவர்களது சாதனைக்குப் பரிசாக, யாழ். போதனா வைத்தியசாலை மேம்படுத்தப்படும் என உறுதி அளித்துள்ளனர்.


நிர்வாகத்தினருடனும் கலந்துரையாடி வைத்தியசாலையில் காணப்படும் குறைநிறைகள் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்தனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் காணப்படும் மருத்துவர்கள் மற்றும் தாதியர் பற்றாக்குறைகள் தொடர்பில் நிர்வாகத்தினர் சார்பில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி அமைச்சின் உயர்மட்டக் குழுவினருக்கு சுட்டிக்காட்டினார்.

இவை தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக சுகாதார பணிப்பாளர் தலைமையிலான குழுவினர்கள் வாக்குறுதி வழங்கினர்.