Tuesday, January 30, 2018

How Lanka

பவுசர்களிலிருந்து பெட்ரோல் திருட்டு: நால்வர் கைது

முல்லேரியா பகுதியில் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பவுசர்களிலிருந்து பெட்ரோலைத் திருட முற்பட்ட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பவுசர்களிலிருந்து பெட்ரோலை வேறு பவுசர்களுக்கு நிரப்பி, பாவனைக்கு உதவாத எரிபொருளை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பவுசர்களுக்கு நிரப்பும் மோசடியில் சந்தேகநபர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய இரண்டு பவுசர்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இரண்டு வருடங்களுக்கும் அதிகமாக சந்தேகநபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹட்டன், கம்பளை, பேராதனை மற்றும் ருவன்வெல்ல பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.