Sunday, January 14, 2018

How Lanka

சபரிமலையில் மகர ஜோதி: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர ஜோதி தென்பட்டபோது, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த மாதம் 30-ந் தேதி நடை திறக்கப்பட்டது. நாள்தோறும் சுவாமிக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று நடைபெற்றது.

18-ம் படி வழியாக திருவாபரண பெட்டிகளை சன்னிதானத்துக்கு எடுத்துச் சென்றார்கள். அந்த ஆபரணங்கள் சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இந்த சமயத்தில் தான் பொன்னம்பல மேட்டில் மாலை 6.30 மணியளவில் 3 முறை மகர ஜோதி தென்பட்டது.

பொன்னம்பல மேட்டில் மகர ஜோதியாக காட்சி தரும் சாமியை தரிசித்த ஐயப்ப பக்தர்கள் ஐயப்பா... ஐயப்பா.... என்று சரணம் கோஷம் எழுப்பினர்.

சபரிமலையில் மகர விளக்கு, மகர ஜோதி தரிசனத்தையொட்டி இதுவரை காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.