Wednesday, February 28, 2018

How Lanka

காஞ்சி சங்கராச்சாரியார் 83 ஆவது வயதில் இயற்கை எய்தினார்

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி இன்று தனது 83 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சங்கராச்சாரியார், இன்று காலமானார்.

இந்தியாவின் தஞ்சாவூரில் இருள் நீக்கி எனும் கிராமத்தில் 1935 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பிறந்தார்.

சுப்ரமணியம் மகாதேவன் என்ற இயற்பெயரைக் கொண்ட அவர், தனது 19 ஆவது வயதில் காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்றார்.

40 வருடங்களின் பின்னர் 1994 ஆம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் 69 ஆவது பீடாதிபதியாக சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்து மதத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்களுள் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியும் ஒருவராவார்.

சங்கராச்சாரியாரின் அபிப்பிராயத்திற்கு அமைய, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் ஆட்சிக்காலத்தில் விலங்குகளை இறைவனுக்கு பலி கொடுப்பதைத் தடுக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டமை நினைவுகூரத்தக்கது.

சங்கராச்சாரியாரின் மறைவிற்கு இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.