Wednesday, February 7, 2018

How Lanka

வசைபாடிய வாய்களுக்கு பூட்டு போட்ட கோஹ்லி - இந்தியா ஹாட்ரிக் வெற்றி

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா அணி ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே நடந்த முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்று முன்னிலையில் உள்ளது.
அதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கேப்டவுனில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற தென்ஆப்ரிக்கா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

ரோகித் சர்மா ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்பின் தவானுடன், தலைவர் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தனர். அதன் பின் இருவரும் அரைசதம் கடந்தனர்.

தவான் 76 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தவான் - கோஹ்லி ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் சேர்த்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ரகானே 11 ஓட்டங்களிலும், ஹர்திக் பாண்டியா 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து கோஹ்லியுடன், டோனி இணைந்தார்.

சிறப்பாக விளையாடிய கோஹ்லி 119 பந்துகளில் சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவரின் 34-வது சதமாகும்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோஹ்லி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 160 ஓட்டங்கள் குவித்தார். இந்திய அணி இறுதியாக 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 303 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக கோஹ்லி 160 ஓட்டங்கள், தவான் 76 ஓட்டங்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் டுமினி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
304 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீரர்களாக ஆம்லா- ஏய்டன் மார்கம் களமிறங்கினர்.

ஆம்லா 1 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்து வீச்சில் வெளியேற, அடுத்து வந்த டுமினி-மார்கம்முடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த ஜோடியால் அணியின் ரன் விகிதம் சீரான வேகத்தில் சென்றது. மார்கம் 32 ஓட்டங்களிலும், அரைசதம் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டுமினி 51 ஓட்டங்களிலும் வெளியேற தென் ஆப்பிரிக்கா ஆட்டம் கண்டது.
இவர்களைத் தொடந்து வந்த மில்லர் 25, ஜோண்டோ 17, மோரிஸ் 14 என வெளியேற தென் ஆப்பிரிக்கா அணி 40 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் இந்திய அணி 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில்3-0 என்று முன்னிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் கோஹ்லியின் தலைவர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. முன்னாள் வீரர்கள் சிலரும் கோஹ்லியை வசைபாட ஆரம்பித்தனர்.

தற்போது ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, இன்னும் 1 போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் தொடரைக் கைப்பற்றிவிடும், அப்படி தொடரைக் கைப்பற்றிவிட்டால் கோஹ்லி பற்றி பேசிய வாய்களுக்கு பூட்டு தான் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.