Tuesday, April 10, 2018

How Lanka

தமிழகத்தில் முக்கிய பிரபலங்கள் பலர் கைது

காவிரி விவகாரம் குறித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இன்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை அண்மித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்றது.

எனினும், போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து மைதானத்தை சுற்றி பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
 தமிழக வாழ்வுரிமை கட்சிகள், எஸ்.டி.பி.ஐ கட்சி, விடுதலை சிறுதைகள் கட்சி, ரஜினி மக்கள் மன்றம், நாம் சிறுத்தைகள் கட்சி, கலை இலக்கிய பண்பாட்டு பேரவை போன்றவை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது மைதானத்துக்குள் சிலர் செருப்பை வீசியுள்ளனர். இதனையடுத்து சற்று நேரத்திற்கு மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
 செருப்பை வீசியவர்கள் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, அவர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், போராட்டத்திர் ஈடுபட்ட சீமான், பாரதிராஜா, கருணாஸ், வா. கௌதமன், தங்கர்பச்சான், மணியரசன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.