Saturday, April 7, 2018

How Lanka

ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல்?

ஜேர்மன் Münster பகுதியில் பாதசாரிகள் மீது வாகனம் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மன் நேரப்படி இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தம் காரணமாக 30 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர். காயமடைந்தவர்களில் 6 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதுவொரு பயங்கரவாத பயங்கரவாத சம்பவமாக கருதப்படுகின்ற போதிலும், உத்தியோகபூர்வமாக இதுவரையிலும் உறுதி செய்யப்படவில்லை.


இதன் போது வாகனத்தின் சாரதி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்குதல் சம்பவத்தினால் 50 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் நாற்காலியில் அமர்ந்திருந்தவர்கள் மற்றும் உணவு பெற்றுக் கொண்டிருந்தவர்கள் மீதே வாகனம் மூர்க்கத்தனமாக மோதியுள்ளது.

அவ்வாறு மோதிய வாகனம் சாம்பல் நிறத்திலான வேன் என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் அவ்விடத்தில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்ற பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தப் பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஹெலிகொப்டர்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் 2016 ஆம் ஆண்டு பேர்லின் நகரில் மேற்கொண்ட வாகன தாக்குதலை நினைவுப்படுத்துவதாக உள்ளது. இந்தத் தாக்குதலின் போது 12 பேர் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.