Thursday, May 24, 2018

How Lanka

மஹிந்த ராஜபக்ச தரப்பினர் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது - பிரதமர் ரணில் எச்சரிக்கை

எதிர்வரும் தேர்தல்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினர் வெற்றி பெறும் பட்சத்தில் ஊடகவியலாளர்கள் கடத்திச் செல்லப்படும் சூழல் மீள உருவாகும் என்று பிரதமர் ரணில் எச்சரித்துள்ளார்.

அமைச்சர் நவீன் திசாநாயக்க ஐ.தே.க.வின் தேசிய அமைப்பாளராக இன்று ஶ்ரீகொத்தாவில் தனது பணிகளை பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார். அதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஏராளமான முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு நவீன் திசாநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த நாட்டில் மீண்டுமொரு ராணுவ அடக்குமுறை ஆட்சி ஏற்பட இடமளிக்கக்கூடாது என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

தற்போதைக்கு ராஜபக்‌ஷ தரப்பின் தாமரை மொட்டு கட்சியின் சின்னத்தில் முன்னாள் ராணுவ அதிகாரிகளே பெரும் தலைவர்களாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் முன்பாக தற்போதைய கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறும் பொம்மைகளாக செல்லாக்காசாக மாறிவிட்டனர்.

இந்நிலையில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் அவர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வரக் கூடாது என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தவறியேனும் அவர்கள் பதவிக்கு வந்தால் ஊடகவியலாளர்கள் கடத்திச் செல்லப்படும் சந்தர்ப்பங்கள் மீண்டும் ஏ்றபடும். நாட்டின் ஜனநாயகத்துக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.