Saturday, May 19, 2018

How Lanka

கல்முனையில் மந்திர - செய்வினை மூலம் பணத்தை கொள்ளையிட்ட பெண்

கல்முனையில் வித்தியாசமான முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மக்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை நகர் மக்கள் அதிகம் நடமாடும் பிரதான வீதியில் நேற்று பிற்பகல் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பெண் ஒருவரிடம் இருந்து இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகை மற்றும் 3000 ரூபா பணத்தை குறித்த பெண் கொள்ளையடித்துள்ளார்.

கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் பெண், அந்தப் பகுதியில் உள்ள அரசாங்க வங்கிக்கு சென்று மீண்டும் திரும்பி வரும் போது சந்தேகநபரான பெண், அவரை அழைத்து ஏதோ கேட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் தனக்கு மொழி தெரியாதென கூறிவிட்டு அந்த பெண் செல்லும் போது அவர் பின்னாலேயே சென்ற நபர் தங்களின் உதவியொன்றை எதிர்பார்ப்பதாக கூறி வீதி ஓரத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் முதல் வந்த பெண் கைக்குட்டை ஒன்றில் கல் போன்ற பொருளை வைத்து வீதி ஓரத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்ணிடம் கொடுத்துள்ளார். எனினும் அந்த பெண் அதனை பெற்றுக் கொள்ளாமல் நிராகரித்துள்ளார். பின்னர் அந்த பெண்ணின் பையில் இந்த கைக்குட்டையை வைத்துள்ளனர்.

சற்று நேரத்தில் அந்த பெண் தன்னிடம் இருந்த நகை மற்றும் பணத்தை கேட்டவுடன் ஒன்றும் கூறாமல் எடுத்து கொடுத்துள்ளார்.

பின்னர் பணம் மற்றும் நகைகளை பெற்றுக்கொண்ட பெண் மற்றும் ஆண் அந்த இடத்தை விட்டு சென்றுள்ளனர். அதனை கொடுத்த பெண் சில நிமிடங்களின் பின் சுய நினைவுக்கு வந்துள்ளார். தனக்கு என்ன நடந்ததென தெரியாமல் வீதியில் நின்று கொண்டிருந்த நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.