Sunday, May 6, 2018

How Lanka

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டுவர விடமாட்டேன் - எஸ்.பி. திசாநாயக்க

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை விவகாரம் காரணமாக சமுர்த்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுப் பதவியில் இருந்து கடந்த மாதம் எஸ்.பி. திசாநாயக்க பதவி விலகியிருந்தார்.

கடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது சமூக வலுவூட்டல் அமைச்சு ஐக்கிய தேசியக் கட்சியின் தயா கமகேவிடம் வழங்கப்பட்டுள்ளதுடன், சமுர்த்தியும் அதன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் இயங்கும் தனியானதொரு வங்கியாக அதனை செயற்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேதின உரையில் தெரிவித்திருந்தார்.

எனினும் எக்காரணம் கொண்டும் அதனை செயற்படுத்த விடப் ​போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க சூளுரைத்துள்ளார்.

சமுர்த்தி வங்கியில் 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வைப்புப் பணம் உள்ளது.

இந்நிலையில், மத்திய வங்கியை பட்டப் பகலில் கொள்ளையடித்தவர்களின் கையில் சிக்கினால் சமுர்த்தி வங்கியின் கதி அதோ கதிதான் என்றும் எஸ். பி. திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.