Tuesday, October 23, 2018

How Lanka

யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பகுதிகளுக்கிடையிலான பிரதான வீதியில் பாரிய வெடிப்பு

யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பகுதிகளுக்கிடையிலான பிரதான வீதியில் பாரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில், அதனை உடன் புனரமைக்குமாறு உரிய தரப்பினருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அழுத்தம் பிரயோகித்துள்ளார்.

வடக்கில் ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் 8 பாலங்கள் அமைக்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது, சில பாலங்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், மற்றும் சில பாலங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, ஜப்பான் அரசின் 3785 மில்லியன் ரூபா நிதியில், வவுனியாவில் ஒரு பாலமும், மன்னாரில் நான்கு பாலங்களும், கிளிநொச்சியில் ஒரு பாலம் மற்றும் யாழ்ப்பாணத்தில் 2 பாலங்கள் என மொத்தம் 8 பாலங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் முக்கிய பாலியாறு பாலமும் குறித்த செயற்றிட்டத்தின் மூலம் கட்டப்படுகின்றது.


எனினும், குறித்த பாலத்தின் நிர்மாணிப்பு குறித்து மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் எவரும் செவிசாய்க்கவில்லை என அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனிடம் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த பாலம் தொடர்பில் அந்த பகுதி இளைஞர்களினால் 4 பிரதான கோரிக்கைள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றுள், அப்பகுதியில் இருந்து முன்னர் அகற்றப்பட்ட இந்து ஆலயத்தினை மீண்டும் புனரமைப்புச் செய்துதரல், முன்னர் இருந்த நில மட்டத்திற்கு மீண்டும் நிலத்தினை உயர்த்துதல், அப்பகுதியுடனான வீதிகளைப் புரனமைப்புச் செய்தல் மற்றும் பாலத்திற்கு அருகில் உள்ள பகுதிகளை உயர்த்துதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.


இதன்படி, மத்திய அரசின் வீதிப்புனரமைப்பு அதிகார சபையின் சிரேஸ்ட நிபுணரும், குறித்த பாலத் திட்ட ஆலோசகருமான பண்டார, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள், குறித்த பால நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளும் ஜப்பான் நிறுவனத்தின் பொறியியலாளர்கள் ஆகியோரின் கவனத்திற்கு குறித்த கோரிக்கைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதன்படி, மக்களின் பிரச்சினைகளை 2 மாதத்திற்குள் நிவர்த்தி செய்து தருவதாகவும், அவ்வாறு தவறும் பட்சத்தில் ஒரு சில மாதங்களில் உடன் நிவர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.


அத்துடன், யாழ்ப்பாணம், மன்னார் பிரதான வீதியில் ஏற்பட்ட பாரிய வெடிப்புக்குறித்து மத்திய அரசின் வீதிப்புனரமைப்பு அதிகார சபையின் சிரேஸ்ட நிபுணரான பண்டாரவின் கவனத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த வீதியை உடன் புனரமைப்புச் செய்து தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு அதிகாரி பண்டார உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.