Monday, July 3, 2017

How Lanka

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான் மக்களுக்கு புது வாக்குறுதி


பிரான்சில் தொடர் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பின்னர் அமுலுக்கு வந்த நெருக்கடி நிலையை நீக்குவதற்கு மெக்ரான் தலைமையிலான புதிய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சில் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்தே நெருக்கடி நிலை அமுலில் உள்ளது. இந்த நிலையில் புதிதாகபொறுப்பேற்றுள்ள அரசு நெருக்கடி நிலையை நீக்க முடிவெடுத்துள்ளதாக ஜனாதிபதி மெக்ரான் தெரிவித்துள்ளார்.

நெருக்கடி நிலை நீக்கப்பட்டாலும், நிரந்தரமாக இஸ்லாமிய தீவிரவாதம் உட்பட பல ஆபத்துகளை எதிர்த்துப் போராட்டத்தை வலுப்படுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெர்செய்ல்ஸ் அரண்மனையில் நடந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தனது அரசியல், பாதுகாப்பு மற்றும் தூதரக கொள்கை முன்னுரிமைகள் குறித்து பேசிய அவர் , “புதிய தாக்குதல்களை தடுக்க துணிந்து செயல்படுவோம், தீவிரவாதிகளுடன் போராட இரக்கம், வருத்தம் மற்றும் பலவீனமின்றி போராடுவோம் என்றார்.

அதே சமயம், தனிநபர்களின் சுதந்திரத்திற்கு முழு மரியாதை கொடுக்க வேண்டியதையும் அவர் வலியுறுத்தினார். புதிய வழிமுறைகள் காவல்துறைக்கு பல அதிகாரங்களை வழங்குவது குறித்து கவலைகள் ஏற்பட்டுள்ளன.

தீவிரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் எடுத்துவரும் இராணுவ தலையீடுகளை தொடர்ந்து நிலைநிறுத்த உறுதி எடுத்துள்ளார் மெக்ரான்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது பலருக்கு இருக்கும் சந்தேகங்களுக்கு பதிலுரைக்கும் விதமாக மெக்ரான், “எனக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நம்பிக்கையுள்ளது.

ஆனால் இந்த எதிர்மறையான எண்ணங்கள் நியாயமற்றவை எனவும் கருதவில்லை” எனவும் அவர் தெரிவித்தார். ஆனால் இடதுசாரிகள் உட்பட பல எதிர்க்கட்சிகள் மெக்ரான் மக்களின் உரிமைகளை பறிக்கும் விதமாக அவசரச் சட்டங்கள் வழியாக ஆட்சி செய்ய முயல்வதாக குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக தொழிலாளர் உரிமைகளை அவர் பறிக்க விரும்புவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகள் அரசியல் தஞ்சம் கோருவோருக்கு ஆதரவாக செயல்படும் அதே நேரத்தில் அகதிகளின் அனுமதியற்ற குடியேற்றம் போன்றவற்றிற்கு எதிராக இணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் மெக்ரான் தெரிவித்துள்ளார்.