Wednesday, October 4, 2017

How Lanka

குடிநீர் தட்டுப்பாட்டு நிலையிலும் ஆயிரக்கணக்கான லீற்றர் நீரை வீண்விரையமாக்கிய அதிகாரிகள்


நாட்டின் 24 மாவட்டங்கள் பாரிய குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ஆயிரக்கணக்கான லீற்றர் நீர் வீண் விரயமாக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரே வீண்விரயமாக்கப்பட்டுள்ளது.

வளவை ஆற்றில் இருந்து பெறப்பட்ட நீர் சுத்திகரிக்கப்பட்டு ஹம்பாந்தோட்டையில் இருந்து மீகஹஜதுர வரையுள்ள குழாயின் ஊடாக, ஹம்பாந்தோட்டை நகருக்கு கொண்டு செல்லப்படுகின்றது.


ஹம்பாந்தோட்டையில் இருந்து மீகஹஜதுர வரையான குழாயின் ஒரு பகுதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிவேக வீதித்திட்டங்களுக்காக இவ்வாறு வீண்விரயமாகும் நீர் பௌசரில் கொண்டு செல்லப்படுவதாக மக்கள் குறிப்பிட்டனர்.

கடும் வறட்சியின் போதும் இந்த பிரதேசங்களிலுள்ள பயிர் நிலங்களுக்கு உரிய முறையில் நீர் விநியோகிக்கப்படுவதில்லை.

எனினும், நீர்க்குழாய் வெடித்துள்ளமையினால் வீண்விரயமாகும் நீரின் ஊடாக விவசாய நடவடிக்கைகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான லீற்றர் நீர் இவ்வாறு வீண்விரயமாகுவது தொடர்பில் அதிகாரிகள் அறிந்திருக்கவில்லையா?



40 வருடங்களுக்கு பின்னர் கடும் வறட்சிக்கு நாடு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் உள்ளவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமல்லவா?