Tuesday, January 2, 2018

How Lanka

நீதி சேவைக்குள் 21ஆவது ஆண்டில் காலடிவைக்கின்றேன் - நீதிபதி இளஞ்செழியன்

நீதி சேவைக்குள் காலடிவைத்து 21ஆவது ஆண்டை ஆரம்பிப்பதாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

யாழ். நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களின் உத்தியோகத்தர்கள், அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக இன்றைய தினம் உறுதியுரை எடுத்துள்ளனர்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நீதி சேவை புனிதமானது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்கான சேவையை வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் நீதிபதிகளான நாங்கள் எமது கடமையை புனிதமாக முன்னெடுத்து வருகின்றோம்.

நான் நீதி சேவைக்குள் காலடிவைத்து 21ஆவது ஆண்டை ஆரம்பிக்கின்றேன். 2018ஆம் ஆண்டில் காலடிவைக்கும் நாங்கள் நீதி சேவையின் புனிதமான கடமையைப் பொறுப்பேற்று முன்னெடுக்க வேண்டும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் யாழ். மேல் நீதிமன்றம், குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மற்றும் யாழ்ப்பாணம் தொழில் நியாய சபை ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.